அதிமுக 'சீட்' தரலையே. 2 தேமுதிக அதிருப்தி எம்.எல்.ஏக்கள் ஏமாற்றம்!

விருதுநகர் சட்டசபை தொகுதி தேமுதிக எம்.எல்.ஏ.வாக இருப்பவர் மா.பா. பாண்டியராஜன். இவர் தேமுதிக தலைவர் விஜயகாந்திடம், லோக்சபா தேர்தலில் விருதுநகரை தமக்கே கொடுக்க வேண்டும் என்று கேட்டிருந்தார். ஆனால் விஜயகாந்த் இதை நிராகரித்துவிட்டார்.
இந்த கோபத்தில்தான் அதிமுகவை ஆதரித்த தேமுதிக அதிருப்தி எம்.எல்.ஏக்களுடன் கை கோர்த்தார் பாண்டியராஜன். அப்போது அதிமுக தரப்பில் இருந்து விருதுநகர் லோக்சபா தொகுதியில் இரட்டை இலை சின்னத்தில் நீங்கள் போட்டியிடுவீர்கள் என்ற உறுதி மொழி கொடுக்கப்பட்டதாம்.
இதனாலேயே அதிமுககாரரைப் போலவே உருமாறியிருந்தார் பாண்டியராஜன். அதிமுகவில் வேட்பாளர்களாக விரும்புவோர் விருப்ப மனு கொடுத்த போது தமது மனைவி பெயரில் 2 தொகுதிகளுக்கு விருப்ப மனு கொடுத்திருந்தார் மா.பா. பாண்டியராஜன். மேலும் விருதுநகர் அல்லது மத்திய சென்னை அல்லது வடசென்னை தொகுதியில் தமக்கு வாய்ப்பு கொடுப்பார்கள் என்று காத்துக் கொண்டிருந்தார் பாண்டியராஜன்.
ஆனால் நேற்றைய அதிமுக வேட்பாளர் பட்டியலில் பாண்டியராஜன் பெயர் இடம்பெறவில்லை. இதனால் அவர் கடுமையாக ஏமாற்றமடைந்து போயுள்ளார்.
விருதுநகரை எப்படி மா.பா. பாண்டியராஜன் எதிர்பார்த்து ஏமாந்தாரோ அதேபோல் கடலூர் தொகுதி கிடைக்கும் என்ற நினைப்பில் இருந்தவர் மற்றொரு தேமுதிக அதிருப்தி எம்.எல்.ஏ. அருண்பாண்டியன். அவருக்கும் வாய்ப்பு கிடைக்காததால் ஏமாந்து போயுள்ளார்.
அரசனை நம்பு புருசனை..தேமுதிக கிண்டல்
இதுபற்றி தேமுதிகவினர் ஃபேஸ்புக் பக்கத்தில், அரசனை நம்பி புருசனை கைவிட்ட ரெண்டு பேர்ல ஒருத்தர் விருதுநகர்லயும், இன்னொருத்தர் கடலூர்லயும் அ.தி.மு.க, வேட்பாளர் பட்டியல் அறிவிப்புக்கு பின்னாடி மனநிலை பாதிக்கப்பட்ட மாதிரி சுத்திகிட்டு இருக்குறதா தகவல் என்று கிண்டல் செய்துள்ளனர்.












Click it and Unblock the Notifications