அதிமுக ஆட்சியில் புதிய மின் திட்டங்கள் துவங்கப்படவே இல்லை: கருணாநிதி
சென்னை: திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்களையும் நிறைவேற்றவில்லை; அதிமுக ஆட்சியில் புதிதாக அறிவித்த திட்டங்களில் இருந்தும் ஒரு மெகாவாட் மின்சாரம் கூடக் கிடைக்கவில்லை; இன்னும் சொல்லப்போனால் புதிய திட்டங்கள் எதுவும் தொடங்கப்படவே இல்லை என்று திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
தமிழ்நாடு மின் வாரியத்திற்கு 6,805 கோடி ரூபாய் வருவாய் கிடைக்கும் வகையில் மின் கட்டணங்களை 15 சதவீதம் முதல் 17 சதவீதம் வரை உயர்த்த, தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் முடிவு செய்து, உத்தேசக் கட்டண உயர்வுப் பட்டியலையும் ஏடுகளிலே வெளியிட்டுள்ளது.

முதல்வர் ஜெயலலிதா மின்சாரக் கட்டணம் உயர்ந்தாலும், ஏழை மக்களுக்கு பாதிப்பு இருக்காது என்றும் கூடுதல் மானியத்தை அரசே வழங்கும் என்றும் குறிப்பிட்டுச் சொல்லாமல் தெளிவின்றி ஓர் அறிவிப்பினைச் செய்திருக்கிறார். ஆனால் ஏழை மக்களுக்குப் பாதிப்பு இருக்காது என்றால், ஏழை மக்கள் என்பதற்கு என்ன வரம்பு அவர் வைத்திருக்கிறார் என்று தெரியவில்லை.
24-9-2014 அன்று பெரும்பாலான ஏடுகளில் வெளிவந்த செய்திகளில் ஒன்று "தொழிற்சாலைகளுக்கு மீண்டும் மின்தடை அறிவிப்பு" என்பதாகும். அதன்படி தொழிற்சாலை மற்றும் வணிக மின் இணைப்புகளுக்கு 20 சதவீத மின் தடை; மாலை 6 மணி முதல் 10 மணி வரை 90 சதவீத மின்தடை 23 ஆம் தேதி முதல் அமலுக்கு வருவதாகத் தெரிவித்திருக்கிறார்கள்.
ஜெயலலிதா 23-9-2014 அன்று விடுத்துள்ள அறிக்கையில், 2011ல் ஆட்சிப் பொறுப்பேற்றதில் இருந்து கடந்த மூன்றாண்டு காலமாக மின் உற்பத்தியைப் பெருக்கத் தேவையான ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளைத் தனது தலைமையிலான அரசு தொடர்ந்து எடுத்து வந்து கொண்டிருக்கிறது என்று கூறிக் கொண்டிருக்கிறார்.
2012 ஆம் ஆண்டு இறுதிக்குள் 3,228 மெகாவாட் மின்சாரம் கிடைக்குமென்று சட்டமன்றத்தில் தெரிவித்தார்களே, அந்த 4 திட்டங்களில் அதிமுக ஆட்சியினர் முனைப்பு காட்டினார்களா? காட்டியிருந்தால் தற்போது தொழிற்சாலைகளுக்கு மின்வெட்டு அறிவிக்க வேண்டிய நிலைமையே ஏற்பட்டிருக்காதே?. திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்களையும் நிறைவேற்றவில்லை; அதிமுக ஆட்சியில் புதிதாக அறிவித்த திட்டங்களில் இருந்தும் ஒரு மெகாவாட் மின்சாரம் கூடக் கிடைக்கவில்லை; இன்னும் சொல்லப்போனால் புதிய திட்டங்கள் எதுவும் தொடங்கப்படவே இல்லை என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications