ஜெ.வை கருமாரி, சரஸ்வதி, கிருஷ்ணனாக மாற்றிய அதிமுகவினர்: போலீசில் புகார்
சிவகாசி: முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு சிவகாசி அருகே அம்மன், சரஸ்வதி, கிருஷ்ணன் வேடத்தில் சித்தரித்து பிளக்ஸ் பேனர்கள் வைத்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதற்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ள இந்து அமைப்பினர், பிளக்ஸ் பேனர்களை உடனடியாக அகற்ற வலியுறுத்தி போலீசில் புகார் அளித்துள்ளனர். போஸ்டர்களால் சர்ச்சை கிளம்பியதை அடுத்து அவற்றை அகற்ற சொல்லி விட்டாராம் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி.
இந்தியாவில் தமிழகத்தை தவிர வேறு எந்த மாநிலத்திலும் இது போன்ற போஸ்டார் கலாச்சாரம் இருப்பதில்லை. அதிலும் அரசியல் கட்சி தலைவர்களுக்கு தொண்டர்கள் வைக்கும் போஸ்டர்கள் நம்மை சிந்திக்க வைக்குமோ இல்லையோ கண்டிப்பாக சிரிக்க வைக்கும்.

ஹாலிவுட் ரேஞ்சுக்கு சிந்தித்து பேனர் வைப்பார்கள். பாகுபலி, எந்திரன் படங்களைப் போல பிரம்மாண்டமா போஸ்டர் ஒட்டுவார்கள். அதிலும் வசனங்களோ... காண்பவர்களை வயிறு குலுங்க சிரிக்க வைக்கும். இதற்கு எந்த அரசியல் கட்சியினரும் விதி விலக்கு அல்ல.
முதல்வர் ஜெயலலிதாவை கடவுள் ரேஞ்சுக்கு சித்தரித்து போஸ்டர் ஒட்டுவதுதான் காண்பவர்களை முகம் சுழிக்க வைக்கும்.
அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் பிப். 24ம் தேதி வருகிறது. இதையொட்டி, மாநிலம் முழுவதும் அதிமுகவினர் விதவிதமாக பேனர் வைத்து வருகின்றனர். குறிப்பாக, சட்டமன்ற தேர்தலில் சீட் கேட்டு விண்ணப்பித்துள்ளவர்கள், தலைமையை கவரும் வகையில், வித விதமாக பிரமாண்ட பேனர்களை வைத்து கவனம் ஈர்த்து வருகின்றனர்.
விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகே செட்டியார்பட்டி, முகவூர் பகுதியில் அதிமுக தொண்டர்கள் மற்றவர்களை மிஞ்சும் வகையில், வித்தியாசமான பேனர்களை வைத்துள்ளனர். பேனர்களில் ஜெயலலிதாவை அம்மன், சரஸ்வதி, கிருஷ்ணன் வேடங்களில் சித்தரித்துள்ளனர். இது அப்பகுதி மக்களை முகம் சுளிக்க வைத்துள்ளது. அனுமதியின்றி இவை வைக்கப்பட்டுள்ளதால், இடையூறு ஏற்பட்டுள்ளது.
ஜெயலலிதாவை சாமி போல் சித்தரித்து வைத்துள்ளது தங்கள் மனதை புண்படுத்தியுள்ளதாகவும், இவற்றை உடனே அகற்ற வேண்டும் எனவும் இந்து அமைப்புகள் சார்பில் தளவாய்புரம் போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.
ஜெயலலிதாவை அம்மன் வேடத்தில் சித்தரித்து அனுமதியின்றி பல இடங்களில் பிளக்ஸ் பேனர்கள் வைத்துள்ளனர். காவல்துறையினர் அனைத்து போர்டுகளையும் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் பாரதிய மஸ்தூர் சங்க மாவட்ட அமைப்பாளர் குருசாமி தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே ஜெயலலிதாவை அம்மனாகவும், மேரி மாதாவாகவும் சித்தரித்து பிளெக்ஸ் வைத்தனர். அது சர்ச்சையை கிளப்பியது. இந்த நிலையில், இப்போது மீண்டும் கடவுளாக சித்தரித்து வைத்துள்ள பேனர்கள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து செய்தித்துறை அமைச்சரும், விருதுநகர் மாவட்ட செயலாளருமான ராஜேந்திர பாலாஜியின் வாட்ஸ் அப்பிற்கு தகவல் வரவே, பேனர்களை வைத்தவர்களை தொடர்பு கொண்டு அவற்றை அகற்றச் சொல்லிவிட்டாராம்.












Click it and Unblock the Notifications