திண்டுக்கல் ஜில்லாவிலேயே வேடசந்தூரில் மட்டும் கலக்கும் அதிமுக... நியூஸ் 7 கருத்துக் கணிப்பு
சென்னை: திண்டுக்கல் மாவட்டத்தில் வேடசந்தூர் தொகுதி தவிர மற்ற அத்தனைத் தொகுதிகளிலும் அதிமுக தோல்வியைத் தழுவும் என்று நியூஸ் 7- தினமலர் கருத்துக் கணிப்பு கூறியுள்ளது.
இந்த மாவட்டத்தில் மொத்தம் 7 தொகுதிகள் உள்ளன. அவை திண்டுக்கல், நிலக்கோட்டை (தனி), ஆத்தூர், நத்தம், வேடசந்தூர், பழனி, ஒட்டன்சத்திரம். நியூஸ் 7- தினமலர் கருத்துக் கணிப்பின்படி இதில் திண்டுக்கல், நிலக்கோட்டை, ஆத்தூர், நத்தம், பழனி ஆகிய ஐந்து தொகுதிகளில் திமுகவுக்கு வெற்றி வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒட்டன்சத்திரத்தில் திமுகவும், அதிமுகவும் சம ஆதரவுடன் காணப்படுவதாகவும் இந்தக் கருத்துக் கணிப்பு கூறியுள்ளது.
அதேசமயம், வேடசந்தூர் தொகுதியில் அதிமுகவுக்கு நல்ல ஆதரவு காணப்படுவதாக இந்தக் கருத்துக் கணிப்பு கூறுகிறது. இந்த மாவட்டத்தில் இந்தத் தொகுதியில் மட்டுமே அதிமுக ஆதரவு அலை வீசுவதாகவும் கருத்துக் கணிப்பு கூறுகிறது.
வேடசந்தூர் சட்டசபை தொகுதி அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள டாக்டர் விபிபி பரமசிவம் (36), திண்டுக்கல் மாவட்ட அதிமுக மருத்துவ அணி துணைச் செயலராக இருந்து வருகிறார். வேடசந்தூர் தொகுதியில் பெரும்பான்மையினராக உள்ள ஒக்கலிகா கவுடா சமூகத்தைச் சேர்ந்தவர்.
எம்பிபிஎஸ்., டி.ஆர்த்தோ, எம்சிஹெச் (ஆர்த்தோ) படித்த இவரது சொந்த ஊர் வேடசந்தூர் அருகே உள்ள வெல்லம்பட்டி. டாக்டர் பரமசிவத்தின் தந்தை வி.பி. பாலசுப்பிரமணியம் கடந்த 1980 மற்றும் 1984 சட்டசபை தேர்தலில் வேடசந்தூர் தொகுதியில் அதிமுக வேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றி பெற்றவர். 1984-87 வரை சட்டசபை துணை சபாநயகராகவும் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
வேடசந்தூர் தொகுதியில் அதிமுகவுக்கு 45.3 சதவீத ஆதரவு கிடைத்துள்ளதாக நியூஸ் 7 கருத்துக் கணிப்பு கூறுகிறது. அடுத்த இடத்தில் வரும் திமுகவுக்கு 34.5 சதவீத ஆதரவு கிடைத்துள்ளது. தேமுதிகவுக்கு 9.2 சதவீத ஆதரவும், பாஜகவுக்கு 2.1 சதவீத ஆதரவும் கிடைத்துள்ளது. யாருக்கும் வாக்களிக்க விரும்பாதோர் எண்ணிக்கை 6.5 சதவீதமாக இருந்தது என நியூஸ் 7- தினமலர் கருத்துக் கணிப்பு கூறுகிறது.