கண்ணுல தண்ணி வராம அழுவது எப்படி.. அமைச்சர்களுக்கு கற்றுத் தந்த சாதனை அரசு: இளங்கோவன்
சென்னை: கண்ணீர் வராமல் அழுவது எப்படி என அமைச்சர்களுக்கு கற்று கொடுத்ததுதான் அதிமுக அரசின் சாதனை எனத் தெரிவித்துள்ளார் தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன்.
விழுப்புரம் மாவட்ட காங்கிரஸ் செயல்வீரர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார் தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன். அப்போது அவர் கூறியதாவது:-
மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சி செய்பவர்கள் பொய் பேசுவதல் வல்லவர்களாக உள்ளனர். காங்கிரஸ் ஆட்சியில் கொண்டு வந்த 100 நாள் திட்டம், முதியோர் உதவித் தொகை திட்டம் தற்போது இல்லை. வெளிநாடு வாழ் இந்தியராகவே நரேந்திர மோடி இருக்கிறார்.
மாநிலத்தில் உரத் தட்டுப்பாடு ஏற்பட்டால் மத்தியில் போராடி பெற வேண்டும். கடிதமா எழுதிக்கொண்டிருப்பார்கள். கடிதம் எழுத பன்னீர்செல்வம் எதற்கு. இந்த ஆட்சியின் மிகப்பெரிய சாதனை கண்ணீர் வராமல் அழுவது எப்படி என 30 அமைச்சர்களுக்கும் கற்று கொடுத்ததுதான்' என இவ்வாறு அவர் தெரிவித்தார்.