அதிமுக ஆட்சியில் மரபுகளை மாற்றுவதே மரபாகிவிட்டது - கருணாநிதி சாடல் !
சென்னை: அதிமுக ஆட்சியில் மரபுகளை மாற்றுவதே மரபாகிவிட்டதாக திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், ''தமிழகத்தின் பொறுப்பு ஆளுநராக மகாராஷ்டிர மாநில ஆளுநர் வித்யாசாகர் ராவ் பொறுப்பேற்றுள்ளார். அவருக்கு வரவேற்பும், விடை பெற்றுச் செல்லும் கே.ரோசய்யாவுக்கு வாழ்த்தும் நன்றியும் தெரிவித்துக் கொள்கிறேன்.

சட்டப்பேரவை நடந்து கொண்டிருக்கும்போது அமைச்சரவையில் யாரையும் சேர்க்கவோ, நீக்கவோ, துறைகளை மாற்றவோ செய்ய மாட்டார்கள். இது மரபு. ஆனால், சட்டப்பேரவை கூட்டத் தொடர் நடந்து கொண்டிருக்கும்போதே அமைச்சர் எஸ்.பி. சண்முகநாதனின் பதவி பறிக்கப்பட்டுள்ளது. மாஃபா பாண்டியராஜன் அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். கே.டி.ராஜேந்திர பாலாஜி, பி.பெஞ்சமின் ஆகியோரது துறைகள் மாற்றப்பட்டுள்ளன. அதிமுக ஆட்சியில் மரபுகளை மாற்றுவது வழக்கமாகி விட்டது.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருக்கும் சின்ன சாந்தன், முதல்வர் ஜெயலலிதாவுக்கு எழுதிய கடிதத்தில், 'பொய்யாக குற்றம்சாட்டப்பட்டு சிறைக் கம்பிகளுடன் 25 ஆண்டுகளாக இல்லறம் நடத்துகிறேன்' என குறிப்பிட்டுள்ளார். மிகப்பெரிய கொடுமை இது.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்குத் தண்டனை பெற்று, பின்னர் ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டு தற்போது வேலூர் சிறையிலே இருப்பவர் சின்ன சாந்தன். முன்னாள் சி.பி.ஐ. அதிகாரியான ஜெபமணி மோகன் ராஜ், "ராஜீவ் கொலை செய்யப்பட்ட இடத்தில் சின்ன சாந்தனும் இருந்திருக்கிறார். அதற்கான போட்டோ ஆதாரத்தை இந்த வழக்கில் தலைமை விசாரணை அதிகாரியான ரகோத்தமன், தான் எழுதிய "ராஜீவ் கொலை வழக்கு" என்ற புத்தகத்திலே வெளியிட்டுள்ளார்" என்று கூறியிருக்கிறார்.
இதுபற்றி சின்ன சாந்தன், ரகோத்தமன் புத்தகத்தில் சின்ன சாந்தன் என்று குறிப்பிடப்பட்டிருக்கும் நபர், தான் இல்லை என்று மறுத்துவிட்டார். இதற்காக ரகோத்தமன் மீது வழக்குத் தொடரும் நிலையிலே அவர் இருக்கிறார். அதுபற்றி ரகோத்தமன் கூறும்போது, தனது புத்தகத் தால் சாந்தனுக்கு சங்கடம் ஏற்பட்டிருந்தால் அதற்காக வருந்துகிறேன் என்று தெரிவித்திருக்கிறார்.
வழக்கு முடிந்து பல ஆண்டுகள் கழித்து சிறையிலே உள்ள கைதிகள் தங்கள் பிரச்சினைகளைக் கூறும்போது மிகவும் பரிதாபகரமாகவும் வருத்தமாகவும் உள்ளது. இனியாவது அந்த வழக்குப் பிரச்சினையில் உண்மை என்ன என்பதை அறிந்து, சிறையிலே வாடிக் கொண்டிருப்பவர்களின் வாட்டம் போக்கி, விரைவில் விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் முன்வருவார்களா என்பது தான் பெரும்பாலானோரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
சில நாட்களுக்கு முன்பு அதிமுக பெண் எம்.பி., தனக்கு பாதுகாப்பு இல்லை என மாநிலங்களவையில் பேசினார். இவர், தாது மணல் விற்பனையில் ஈடுபட்டுள்ள தொழிலதிபரின் ஆதரவாளர் என கூறப்படுகிறது. இந்த தொழிலதிபருக்கு எதிராக அவரது சகோதரரே சில குற்றச்சாட்டுகளை கூறினார். ஆனால், தொழிலதிபரின் மீது நடவடிக்கை எடுக்க முடியாமல் அவருக்கு ஆதரவாக இருந்த அதிகாரிகள் மீதுதான் தமிழக அரசு நடவடிக்கை எடுப்பதாக கூறப்படுகிறது.
ரூ.6,402 கோடியில் மோனோ ரயில் திட்டம் செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மோனோ ரயில் குறித்து 3-வது முறையாக வெளியாகும் அறிவிப்பு இது. காவல் துறையினருக்கான வீட்டுவசதி பற்றி பேச திமுகவினருக்கு தகுதி இல்லை என முதல்வர் ஜெயலலிதா பேசியிருக்கிறார். திமுக ஆட்சியில்தான் காவலர்களின் நலனுக்காக காவல் ஆணையம் அமைக்கப்பட்டது. தலைமைச் செயலக வாயிலில் பேரவை முடியும் நாளில் பெண் காவல் ஆய்வாளர் தீக்குளிக்க முயற்சித்துள்ளார். காவல்துறை மீது அதிமுக அரசுக்கு எவ்வளவு அக்கறை இருக்கிறது என்பதற்கு இந்த ஒரு சம்பவம் போதுமானது'' என்று கருணாநிதி கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications