நீதித்துறையை அவமானப்படுத்தும் கருணாநிதி மீது நடவடிக்கை எடுங்கள்: அதிமுக வக்கீல்கள் புகார்
சென்னை: நீதித்துறையை அவமானப்படுத்தும் திமுக தலைவர் கருணாநிதி, மு.க. ஸ்டாலின், பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் உள்ளிட்டோர் மீது கிரிமினல் வழக்கு, நீதிமன்ற அவமதிப்பு வழக்கு ஆகியவற்றின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிமுக வழக்கறிஞர்கள் சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு புகார் மனு அனுப்பி வைத்துள்ளனர்.
அதிமுகவைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் எஸ். திவாகர், பி.வி. செல்வகுமார், சி. திருமாறன் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கூட்டாக புகார் மனு ஒன்றை அனுப்பி வைத்துள்ளனர். சென்னை உயர் நீதிமன்ற தலைமை பதிவாளர் பொன். கலையரசனின் அலுவலகத்திற்கு அந்த புகார் மனு ஃபேக்ஸ், இ-மெயில் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது,
அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா மீது அரசியல் பழிவாங்கும் நோக்கத்துக்கு, தி.மு.க. தலைவர் கருணாநிதியின் தூண்டுதலின் பேரில் 14 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. அதில் 13 வழக்குகளில் ஜெயலலிதா விடுதலை பெற்றார். கடைசி வழக்கான சொத்து குவிப்பு வழக்கிலும், கடந்த 11-ந் தேதி ஜெயலலிதா உள்ளிட்டோரை விடுதலை செய்து கர்நாடகா ஐகோர்ட்டு தீர்ப்பளித்துள்ளது.
இந்த கிரிமினல் வழக்குகள் எல்லாம் ஜெயலலிதா மீது வேண்டுமென்றே உள்நோக்கத்துடன் பதிவு செய்யப்பட்டது என்று தமிழக மக்களுக்கு நன்றாக தெரியும். மேலும், இவை எல்லாம் பொய் வழக்குகள் என்று தெரிந்து இருந்தும், அந்த வழக்குகளை எல்லாம் ஜெயலலிதா சட்டப்படி எதிர்கொண்டு விடுதலை பெற்றுள்ளார். கர்நாடகா ஐகோர்ட்டு கடந்த 11-ந் தேதி ஜெயலலிதா உள்ளிட்டோரை விடுதலை செய்து தீர்ப்பு வழங்கிய உடன் தி.மு.க. தலைவர் கருணாநிதி, அவரது மகன் மு.க.ஸ்டாலின், பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் மற்றும் சுப்பிரமணியசாமி ஆகியோர் அவதூறான கருத்துக்களை பத்திரிகைகள், டி.வி. சேனல்கள் மூலம் தெரிவித்து வருகின்றனர்.
இவர்கள் நீதித்துறையையும், குறிப்பாக கர்நாடகா ஐகோர்ட்டு நீதிபதியையும் தரம் தாழ்த்தி பேசி வருகின்றனர். இவர்களது பேட்டிகள் பத்திரிகைகளிலும், டி.வி. சேனல்களிலும் வெளியாகியுள்ளது. இவ்வாறு அவதூறான கருத்துக்களை தெரிவிக்கும் இந்த தலைவர்கள், கர்நாடகா ஐகோர்ட்டு வழங்கிய தீர்ப்பை முழுவதும் படித்து பார்க்காமல், அரசியல் லாபத்துக்காக சந்தேகங்களையும், குற்றச்சாட்டுக்களையும் நீதித்துறை மற்றும் நீதிபதி மீது சுமத்தி வருகின்றனர். இந்த அரசியல் தலைவர்கள் நீதித்துறை மற்றும் நீதிபதியின் நீதிபரிபாலன நடவடிக்கையில் தலையிடுகின்றனர். இவர்களது பேட்டிகள், இந்த வழக்கில் இந்த நீதிபதி இப்படித்தான் செயல்பட வேண்டும் என்று கூறுவதை போல் உள்ளது.
இந்த அரசியல் தலைவர்கள் தங்களது எல்லையை தாண்டி, நீதித்துறையை அவமானப்படுத்தும் விதமாக செயல்படுகின்றனர். எனவே, இந்த தலைவர்கள் மீது கிரிமினல் வழக்கு, கோர்ட்டு அவமதிப்பு வழக்கு ஆகியவற்றின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம் என்று அவர்கள் அதில் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications