'அம்மா' இடத்திற்கு நீங்க தான் வரணும் சின்னம்மா: சசியிடம் அதிமுக தலைவர்கள் வேண்டுகோள்
சென்னை: புரட்சித் தலைவி அம்மா காட்டிய வழியில் நீங்கள் தான் கட்சியை தலைமை தாங்கி வழிநடத்த வேண்டும் என அதிமுக நிர்வாகிகள் சசிகலாவை மீண்டும் கேட்டுக் கொண்டுள்ளனர்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவை அடுத்து அதிமுகவுக்கு யார் தலைமை தாங்கப் போகிறார் என்ற கேள்வி எழுந்தது. இந்நிலையில் தான் ஜெயலலிதாவின் தோழியான சசிகலாவை கட்சியின் தலைமை பொறுப்பை ஏற்குமாறு அதிமுக நிர்வாகிகள் கோரிக்கை விடுத்தனர்.

இந்நிலையில் கட்சிக்கு தலைமை தாங்கி வழிநடத்துமாறு அதிமுகவினர் சசிகலாவுக்கு மீண்டும் கேட்டுக் கொண்டுள்ளனர். சசிகலாவை கட்சியின் தலைவியாக்கக் கூடாது என்று அதிமுகவில் சிலர் எதிர்ப்புக் குரலும் எழுப்பியுள்ளனர்.
சசிகலா தலைமை பொறுப்பு ஏற்பது குறித்து முதல்வர் பன்னீர்செல்வம் கூறியதாக ஜெயா பிளஸ் தொலைக்காட்சி சேனலில் கூறியிருப்பதாவது,
சசிகலா தலைமை பொறுப்பு ஏற்பதில் மாற்றுக் கருத்தே இல்லை. அப்படி மாற்றுக் கருத்து உள்ளவர்கள் உண்மையான அதிமுகவினராக இருக்க முடியாது. ஜெயலலிதாவின் செயல்பாடுகளை அருகில் இருந்து 30 ஆண்டு காலமாக பார்த்தவர் சசிகலா.
அம்மாவை போன்றே சின்னம்மாவுக்கும் கட்சியில் உள்ள அனைவரையும் நன்கு தெரியும். கட்சி தொடர்ந்து நல்ல முறையில் நடக்க வேண்டும் என்றால் சின்னம்மா தான் தலைமை பொறுப்பை ஏற்க வேண்டும். அம்மா விட்டுச் சென்ற வெற்றிடத்தை நிரப்புமாறு அதிமுக மூத்த தலைவர்கள் மற்றும் அமைச்சர்கள் சசிகலாவுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர் என்றார்.












Click it and Unblock the Notifications