ஜெயலலிதாவுக்கு சிறை: டிவியில் செய்தி பார்த்த தொண்டர் தீக்குளித்து மரணம் - ஒருவர் படுகாயம்
சென்னை: சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவிற்கு 4 ஆண்டுகள் சிறைதண்டனை விதிக்கப்பட்டதை டிவியில் பார்த்த அதிமுக தொண்டர் தீக்குளித்து உயிரிழந்தார். மற்றொருவர் படுகாயங்களுடன் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
சென்னை வளசரவாக்கம் அடுத்த ஏ.பி.என். பிரதாப் நகர் பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 58). இவரது மனைவி லட்சுமி. இவர்களுக்கு அமுதா, அன்பரசன், தேவி என 3 குழந்தைகள் உள்ளனர்.
அ.தி.மு.க தொண்டரான வெங்கடேசன் எலக்ட்ரீசியனாக வேலை செய்து வருகிறார். ஜெயலலிதா வழக்கில் அளிக்கப்படும் தீர்ப்பை அறிவதற்காக நேற்று மாலை அவர் வீட்டில் டிவி பார்த்துக் கொண்டிருந்தார்.
அப்போது சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டதாக வெளியான செய்தியை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உடனே வீட்டில் இருந்த பெட்ரோல் கேனை எடுத்துக் கொண்டு, வெளியே ஓடி வந்த அவர் ‘அம்மா வாழ்க' என்று கூறியபடி உடலில் பெட் ரோலை ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.
இதில் அவரது உடலில் தீப்பிடித்து எரிந்தது. இதனால் வேதனையில் அவர் அலறினார். இதைக் கண்டதும் அக்கம், பக்கத்தினர் அவரை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலன் அளிக்காமல் இரவில் அவர் இறந்தார். இதுகுறித்து கே.கே. நகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதே போன்று தீர்ப்பு வெளியானதை டெலிவிஷனில் பார்த்த விருகம்பாக்கம் தசரதபுரம் பகுதியை சேர்ந்த அ.தி.மு.க. தொண்டர் பாஸ்கர் (30) என்பவர் உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அவரை அருகில் இருந்த அ.தி.மு.க. வினர் மற்றும் போலீசார் அவரது உடலில் தண்ணீர் ஊற்றி அவரை காப்பாற்றினார்கள்.












Click it and Unblock the Notifications