'அம்மா' புகழ்பாடியே கேள்வி நேரத்தை வீணடிக்கின்றனர்: துரைமுருகன் தாக்கு
தூத்துக்குடி: அதிமுகவினர் முதல்வரின் புகழ்பாடியே சட்டசபையில் கேள்வி நேரத்தை வீணடிக்கிறார்கள் என்று திமுக துணை பொதுச் செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
சட்டசபையில் ஜனநாயகம் படும்பாடு என்ற தலைப்பில் தமிழகம் முழுவதும் கண்டன பொதுக்கூட்டங்கள் நடத்தப்படும் என்று திமுக தலைவர் கருணாநிதி அறிவித்திருந்தார். அதன்படி மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கண்டன பொதுக் கூட்டங்கள் நடைபெற்றன.
தூத்துக்குடியில் நடந்த கூட்டத்தில் திமுக துணை பொதுச் செயலாளர் துரைமுருகன் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர் கூறுகையில்,
விதிகள், மரபுகளின் படி தான் தமிழக சட்டசபை நடத்தப்பட வேண்டும். ஆனால் தற்போது சபை மரபுகள் மீறப்படுகிறது. சபாநாயகர் மற்றும் அமைச்சர்களுக்கு சபையின் விதிகள் பற்றி தெரியவில்லை. முதல்வரின் புகழ்பாடியே சட்டசபையில் கேள்வி நேரத்தை வீணடிக்கிறார்கள்.
அரசு மக்களின் நிலையை தெரிந்துகொள்ள வேண்டும். எதிர்கட்சிகள் கொடுக்கும் குரல் மூலம் மக்களின் நிலை தெரியும். அதை கேட்கவில்லை எனில் மக்களின் குரல் ஆளும் கட்சிக்கு கேட்காது. மக்களின் குரலை கேட்காத கட்சியாகிவிட்டது அதிமுக என்றார்.