முத்துப்பேட்டையில் அதிமுக தொண்டர் தூக்குப்போட்டு தற்கொலை: பண்ருட்டியில் தீக்குளித்த தொண்டர் மரணம்
திருவாரூர்: அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா சிறையில் அடைக்கப்பட்டதைக் கண்டித்து தமிழகத்தில் தற்கொலை செய்வோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
கடந்த ஞாயிறன்று முத்துப்பேட்டை அருகே அதிமுக தொண்டர் ஞாயிற்றுக்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பன்ருட்டி அருகே தீக்குளித்த தொண்டர் இன்று காலையில் உயிரிழந்தார். இதனையடுத்து ஜெயலலிதா சிறைக்கு சென்ற பின்னர் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 64 ஆக அதிகரித்துள்ளது.
சொத்து குவிப்பு வழக்கில் முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.100 கோடி அபராதமும் விதித்து பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதையடுத்து ஜெயலலிதா சிறையில் அடைக்கப்பட்டார்.
அதிமுகவினர் தற்கொலை
இந்த தகவல் அறிந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அதிமுகவினர் தீக்குளித்து, தூக்கிட்டு, விஷமருந்தி, பஸ், ரயில் முன்பு பாய்ந்து, ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டனர்.
தூக்குப் போட்டு தற்கொலை
இந்த நிலையில் திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த கோவிலூர் வடக்காடு கிராமத்தை சேர்ந்த தங்கவேல் மகன் முருகேஷ்(30). அ.தி.மு.கவின் தீவிர தொண்டர். சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவை கைது செய்த நாளிலிருந்து பெரும் மன உலைச்சலில் காணப்பட்டார். கடந்த ஞாயிறன்று எடையூரில் நடந்த உண்ணாவிரதத்தில் கலந்து கொண்ட முருகேஷ் மாலை வீடு திரும்பினார். பின்னர் அன்று இரவு வீட்டு அருகில் உள்ள கீற்று கொட்டாகையில் தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொண்டார். முருகேஷனுக்கு மனைவியும் இரு பெண் குழந்தையும் உள்ளனர். முருகேஷ் உடலுக்கு அ.தி.மு.க முக்கிய நிர்வாகிகள் மாலை அணிவித்து இறுதி அஞ்சலி செலுத்தினார்கள்.
தீக்குளித்த தொண்டர்
இதேபோல ஜெயலலிதா விடுதலை பெற வேண்டும் என்று கோரி பண்ருட்டி அருகே பயத்தம்பாடிசத்திரம் பகுதியைச் சேர்ந்த அதிமுக தொண்டர் வெங்கடேசன் நேற்று மாலை 4 அளவில் தன் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். பின்னர் அவர் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். இந்நிலையில், அவர் இன்று அதிகாலை உயிரிழந்தார்.
இதுவரை 64 பேர் மரணம்
அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட தகவல் அறிந்து தற்கொலை செய்து கொண்டும், மாரடைப்பாலும் 64 பேர் உயிரிழந்துள்ளனர் என்று அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதிர்ச்சியில் மட்டும் 44 பேர் இறந்துள்ளனர். தற்கொலை செய்து கொண்டு 20 பேர் உயிரிழந்துள்ளதாக அதிமுகவினர் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications