இளங்கோவனுக்கு வலுக்கும் எதிர்ப்பு.. வீடு அருகே அதிமுகவினர் போராட்டம்
சென்னை: பிரதமர் மோடி - முதல்வர் ஜெயலலிதாவின் சந்திப்பை கொச்சைப்படுத்தி பேசியதாக கூறி தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவனை கண்டித்து அதிமுக தொழிலாளர் அணியினர் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை அண்ணாசாலையில் இளங்கோவனின் உருவபொம்மை எரிக்கப்பட்டதால் பதற்றம் உருவாகியுள்ளது.
நெசவாளர்கள் மாநாட்டில் பங்கேற்க சென்னை வந்த பிரதமர் முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ் தோட்டத்திற்கு இல்லத்திற்கு சென்று மதிய உணவு அருந்தினார். இதுகுறித்து சர்ச்சைக்குரிய கருத்தை தமிழக காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ்.இளங்கோவன் தெரிவித்ததாகக் கூறி, பாஜ மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், ஹெச்.ராஜா ஆகியோர் கண்டனம் தெரிவித்திருந்தனர்.

அதிமுகவினர் போராட்டம்
இந்த நிலையில் தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் அதிமுகவினர் இளங்கோவனின் உருவபொம்மையை கொளுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இரண்டாவது நாளாக இன்றும் அதிமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மன்னிப்பு கேட்க வேண்டும்
சென்னை அண்ணாசாலையில் குவிந்த அதிமுகவினர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவனுக்கு எதிராக முழக்கமிட்டனர். மன்னிப்பு கேள்... மன்னிப்புக்கேள் இளங்கோவன் மன்னிப்பு கேள் என்று முழக்கமிட்டவாரே அவர் சத்திய மூர்த்தி பவனை நோக்கி பேரணியாக சென்றனர். அதிமுகவினரின் கையில் ஈ.வி.கே.எஸ் இளங்கோவனின் கொடும்பாவியும் வைத்திருந்தனர். இதனால் காலை நேரத்தில் அண்ணாசாலையில் பரபரப்பு ஏற்பட்டது.

உருவபொம்பை எரிப்பு
அப்போது அங்கு குவிந்திருந்த போலீசார், அதிமுகவினரை தடுத்து நிறுத்தினர். இதனையடுத்து அதிமுகவினர் ஸ்பென்சர் ப்ளாசா அருகே ஈ.வி.கே.எஸ் இளங்கோவனின் கொடும்பாவியை எரித்தனர். சத்திய மூர்த்தி பவனை நோக்கி பேரணியாக சென்று முற்றுகையிடப்போவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

நேற்றும் போரட்டம்
மாநிலங்களவை உறுப்பினர் நவநீத கிருஷ்ணன் தலைமையில் திரண்ட நூற்றுக்கும் மேற்பட்ட அதிமுக தொண்டர்கள் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு எதிராக கோஷங்களை எழுப்பியவாறு சத்திய மூர்த்தி பவன் நோக்கி வந்தனர்.
அவர்களை காவல் துறையினர் தடுக்க முயன்றதால் இரு தரப்பினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அதிமுக தொண்டர்களில் ஒரு பிரிவினர் தடுப்புகளைத் தாண்டிச் சென்று பதாகைகளை கிழித்தெரிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இளங்கோவனுக்கு எதிர்ப்பு
சென்னையில் திருவல்லிக்கேணி பல்லவன் இல்லம் முன்பு 150க்கும் மேற்பட்ட அதிமுகவினர் திரண்டனர். அவர்கள் இளங்கோவனுக்கு எதிராக கோஷமிட்டனர். தொடர்ந்து அவரது உருவ பொம்மையை தீயிட்டு கொளுத்தினர். தகவல் அறிந்து திருவல்லிக்கேணி போலீசார் விரைந்து வந்ததால் கலைந்து சென்றனர்.

அதிமுகவினர் கொதிப்பு
அடையாறு சத்யா ஸ்டூடியோ அருகே மயிலாப்பூர் பகுதி அதிமுக செயலாளர் ஜெயச்சந்திரன் தலைமையில் திரண்ட அதிமுகவினர் இளங்கோவன் உருவ பொம்மையை எரித்தனர். இதேபோல, மயிலாப்பூர் லஸ் சிக்னலிலும் உருவ பொம்மையை கொளுத்தினர். தகவல் அறிந்து மயிலாப்பூர் போலீசார் விரைந்து வந்து அதிமுகவினரை கலைந்து செல்லும்படி கூறினர்.

தாம்பரத்தில் போராட்டம்
தாம்பரம் பேருந்து நிலையம் அருகே நகராட்சி தலைவர் கரிகாலன் தலைமையில் அதிமுகவினர், இளங்கோவன் உருவ பொம்மையை எரித்து போராட்டம் நடத்தினர். தகவலறிந்து தாம்பரம் போலீசார், தண்ணீர் ஊற்றி தீயை அணைத்தனர். மேலும், குரோம்பேட்டை, பல்லாவரம் பகுதியில் தன்சிங் எம்எல்ஏ தலைமையில், பல்லாவரம் நகராட்சி துணை தலைவர் ஜெயபிரகாஷ் உட்பட பலர் கலந்து கொண்டு இளங்கோவன் உருவ பொம்மையை எரித்தனர்.

வீட்டிற்கு பாதுகாப்பு
நந்தம்பாக்கம் அருகே இளங்கோவன் வீட்டு முன்பு அதிமுகவினர் போராட்டம் நடத்தப்போவதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது.
போலீசார் விரைந்து சென்றனர். அதற்குள் நந்தம்பாக்கம் ஆத்துபாலம் அருகே அதிமுகவினர் 25 பேர் திரண்டு வந்து கொடும்பாவியை கொளுத்தினர்.

திருநெல்வேலியில் ஆர்பாட்டம்
சென்னை மட்டுமல்லாது தமிழகம் முழுவதும் இளங்கோவனுக்கு எதிர்ப்பு வலுத்து வருகிறது. திருநெல்வேலியில் திங்கள்கிழமை அதிமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் ஈ.வி.கே.எஸ் இளங்கோவனின் உருவ பொம்மையை எரித்தனர். வண்ணாரப்பேட்டை பகுதியில் நடைபெற்ற போராட்டத்தால் பரபரப்பு ஏற்பட்டது.

வேடசந்தூரில் போராட்டம்
திண்டுக்கல் மாவட்ம் வேடசந்தூரில் தென்னம்பட்டி ச.பழனிச்சாமி எம்.எல்.ஏ., தலைமையில் அதிமுகவினர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் உருவபொம்மையை எரித்தனர். ஒன்றியப்பெருந்தலைவர் திரு ப.சுப்பிரமணியன், மருத்துவர் அணி மாவட்ட துணைச்செயலாளர் டாக்டர் திரு வி.பி.பி.பரமசிவம் ஆகியோர் உடனிருந்தனர்.

காஞ்சியில் போராட்டம்
காஞ்சிபுரம், வாலாஜாபாத் பேருந்து நிலையம், ஸ்ரீபெரும்புதூர் பேருந்து நிலையம், உத்திரமேரூர் பேருந்து நிலையம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அதிமுக தொண்டர்கள் ஈ.வி.கே.எஸ் இளங்கோவனின் உருவ பொம்மையை எரித்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications