என்னை உயிரோடு எரித்துவிடுவார்களாம் அதிமுகவினர், அது ஒன்றும் அவர்களுக்கு புதிது அல்லவே: ஈவிகேஎஸ்
சேலம்: தன்னை உயிருடன் எரிப்பதாக அதிமுகவினர் தெரிவித்ததாகவும், அது ஒன்றும் அவர்களுக்கு புதிது அன்று என்றும் தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
மதுவிலக்கு கோரி செல்போன் டவர் மீது ஏறி போராடியபோது உயிர் இழந்த காந்தியவாதி சசிபெருமாளின் குடும்பத்தாரை சந்தித்து கட்சி சார்பில் ரூ.5 லட்சம் நிதி அளித்தார் தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்.
பிறகு அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,

சசிபெருமாள்
சசிபெருமாள் இறந்ததற்கு தமிழக அரசு இதுவரை இரங்கல் தெரிவிக்காமல் உள்ளது வேதனையாக இருக்கிறது. அவர் யாருக்கும் அஞ்சாமல் தனது கொள்கைக்காக போராடியவர்.

பொய் வழக்குகள்
எத்தனை பொய் வழக்குகள் தொடர்ந்தாலும் அவற்றை சந்திக்க தயாராகவே இருக்கிறோம். என்னை கைது செய்டுவிடுவார்களோ என்று நான் பயப்படவில்லை. சிறைவாசத்தை அனுபவித்தவன் தான் நான்.

கைது
தமிழகத்தில் உண்மையான குற்றவாளிகள் அல்ல மாறாக அப்பாவிகள் தான் கைது செய்யப்படுகின்றனர். சேலத்தில் உருவபொம்மையை எரித்ததாகக் கூறி காங்கிரஸாரை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். நீதிபதியோ இருதரப்பும் உருவபொம்மையை எரித்திருக்கையில் இவர்களை மட்டும் ஏன் கைது செய்தீர்கள் என்று போலீசாரிடம் கேட்டுள்ளார். இது போலீசாருக்கு ஏற்பட்ட அவமானம் ஆகும்.

போலீஸ்
எங்களுக்கு காவல் துறையினர் மீது கோபம் எதுவும் இல்லை. ஏனென்றால் அவர்கள் வெறும் அம்பு தான்.

எரிப்பு
என்னை உயிரோடு எரித்துவிடுவதாக அதிமுகவினர் தெரிவித்துள்ளனர். உயிருடன் எரிப்பது என்பது அவர்களுக்கு புதிது அல்ல. ஏற்கனவே வேளாண் கல்லூரி மாணவிகள் 3 பேரை உயிரோடு எரித்தவர்கள் தானே அதிமுகவினர் என்றார் இளங்கோவன்.












Click it and Unblock the Notifications