இலவச பஸ் பாஸ் வழங்கும் அரசை எதிர்த்து மாணவர்கள் போராடலாமா... அமைச்சர் கடம்பூர் ராஜூ கேள்வி
இலவச பஸ் பாஸ் வழங்கும் அரசை எதிர்த்து மாணவர்கள் போராடலாமா என்று தமிழக செய்தி, விளம்பர துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ கேள்வி எழுப்பியுள்ளார்.
நாகர்கோவில் : இலவச பஸ் பாஸ் வழங்கும் அரசை எதிர்த்து மாணவர்கள் போராடலாமா என்றும் பஸ் கட்டண உயர்வை காரணம் காட்டி மாணவர்கள் போராட்டத்தை சிலர் தூண்டி விடுவதாகவும் தமிழக செய்தி, விளம்பர துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்தார்.
இதுகுறித்து நாகர்கோவிலில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது, தமிழகத்தில் பஸ் கட்டணம் உயர்த்தப்பட்டு உள்ளது. இந்த கட்டண உயர்வு தவிர்க்க முடியாதது ஆகும். கடந்த தி.மு.க. ஆட்சியின்போது போக்குவரத்து தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய நிலுவை தொகையை வழங்காததால் ரூ.1000 கோடி கடன் தொகை இருந்தது.

அதன்பிறகு அந்த கடன் சுமை அதிகரித்தது. மேலும் கடந்த 6 ஆண்டுகளாக பஸ் கட்டணம் உயர்த்தப்படவில்லை. இதனால் வேறுவழி இல்லாமல் பஸ் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. கட்டண உயர்வுக்கு பிறகும் மற்ற மாநிலங்களை ஒப்பிடும் போது நமது மாநிலத்தில் பஸ் கட்டணம் குறைவாகவே உள்ளது.
வாகனங்களுக்குக்கான உதிரி பாகங்கள் விலை உயர்வு, பெட்ரோல், டீசல் விலை உயர்வு போன்ற காரணங்களால் மிகுந்த சிரமத்திற்கு இடையேதான் கட்டண உயர்வு செய்யப்பட்டுள்ளது. போக்குவரத்து தொழிலாளர்கள் நிலுவை தொகை கேட்டு போராட்டம் நடத்தினார்கள். எதிர்கட்சிகளும் அதில் பங்கேற்றனர். எனவே பிரச்சினையை சுமூகமாக முடிக்க அரசு நடவடிக்கை மேற்கொண்டது.
யாரும் பாதிக்காத வகையில் இந்த பிரச்சினை பேசி முடிக்கப்பட்டுள்ளது. தற்போது பஸ் கட்டண உயர்வுக்கு எதிராக மாணவர்களை சிலர் தூண்டிவிட்டு உள்ளதால் அவர்கள் போராட்டத்தில் குதித்து உள்ளனர். உண்மை தெரிந்தால் மாணவர்கள் போராடமாட்டார்கள். ஜெயலலிதா ஆட்சியில் மாணவர் நலன் கருதி இலவச பஸ் பாஸ் திட்டம் கொண்டு வந்தார். அந்த திட்டம் தற்போதும் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதுபோன்ற உண்மைகள் தெரியும்போது மாணவர்கள் போராட்டம் நடத்த மாட்டார்கள். இவ்வாறு அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications