ஓபிஎஸும் ஈபிஎஸும் கட்சியை அழித்துவிட்டனர்.. அதிமுக எம்எல்ஏ பேச்சால் கட்சிக்குள் பூகம்பம்!
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும் துணை முதல்வர் பன்னீர்செல்வமும் ஆட்சியில் செலுத்தும் கவனத்தை, கட்சியில் செலுத்தவில்லை என அதிமுக எம்எல்ஏ சண்முகநாதன் குற்றம்சாட்டியுள்ளார்.
Recommended Video

சென்னை: முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும் துணை முதல்வர் பன்னீர்செல்வமும் ஆட்சியில் செலுத்தும் கவனத்தை, கட்சியில் செலுத்தவில்லை என அதிமுக எம்எல்ஏ சண்முகநாதன் குற்றம்சாட்டியுள்ளார்.
தூத்துக்குடி, மேலூர் கூட்டுறவு வங்கி தேர்தல் 2 முறை ஒத்திவைக்கப்பட்டு நேற்று முன்தினம் நடந்தது. இதில் அமைச்சர் கடம்பூர் ராஜூ ஆதரவாளர்கள் ஒரு தரப்பாகவும், முன்னாள் அமைச்சர் எஸ்பி சண்முகநாதன் ஆதரவாளர்கள் மற்றொரு தரப்பாகவும் போட்டியிட்டனர். 5 பேர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர். 6 இடங்களுக்கு மட்டுமே தேர்தல் நடந்தது.
இதைத்தொடர்ந்து தூத்துக்குடி மாவட்டம் வைகுண்டம் தொகுதி எம்எல்ஏவான சண்முகநாதன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அதிமுக தலைமை மீது அவர் சரமாரியான குற்றச்சாட்டுக்களை கூறினார்.

எம்எல்ஏ சண்முகநாதன்
அவர் பேசியதாவது, ஜெயலலிதா மறைவுக்கு பின்பு முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்வர் பன்னீர்செல்வமும் ஆட்சியை சிறப்பாக நடத்தி வருகின்றனர். கூட்டுறவு தேர்தல் அறிவித்தபோது தேர்தலில் போட்டியிடும் அதிமுகவினர், தலைவர்கள் யாராக இருந்தாலும் தொந்தரவு செய்யக் கூடாது. மற்றவர்கள் இருக்கும் இடங்களில் போட்டி போட்டு வெற்றி பெற வேண்டும் என கட்சி மேலிடம் கூறியிருந்தது.

ஒரு எம்எல்ஏகூட இல்லை
ஆனால், தற்போது இருக்கும் நிர்வாகிகளான அமைச்சர் கடம்பூர் ராஜூ, தூத்துக்குடி மாவட்ட செயலாளர் சி.த.செல்லப்பாண்டியன், தற்போது அமைப்பு செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள சின்னதுரை ஆகியோர் கட்சியை அழித்து வருகின்றனர். இவர்களுக்கு துணையாக இருப்பது தளவாய் சுந்தரம். அவர் கன்னியாகுமரி மாவட்டத்தில் கட்சியை அழித்து விட்டார். அங்கு அதிமுகவிற்கு ஒரு எம்எல்ஏ கூட இல்லை.

அழிவுபாதையில் கட்சி
தமிழக முதல்வர் ஈபிஎஸ், துணை முதல்வர் ஓபிஎஸ் இருவரும் ஆட்சியை கட்டுக் கோப்போடு நடத்தி வருகின்றனர். ஆனால், கட்சியை அழிவுப் பாதைக்கு கொண்டு சென்று விட்டனர். ஓபிஎஸ் தரப்பில் மனோஜ் பாண்டியன் சொல்வதை கேட்கின்றனர். எடப்பாடி தரப்பில் தளவாய் சுந்தரம் பேச்சை கேட்கின்றனர். அவர்கள் இந்த 3 மாவட்டத்திலும் கட்சியை அழித்து விட்டனர்.

கட்சியில் கவனம் செலுத்தவில்லை
கடந்த 1972ல் அதிமுக ஆரம்பித்த போதே நான் கட்சியில் இருக்கிறேன். 100 ஆண்டுகள் இந்த இயக்கம் இருக்க வேண்டும் என்று ஜெயலலிதா எண்ணினார். அதற்காகவே நான் உழைத்து வருகிறேன். ஆனால், ஓபிஎஸ், ஈபிஎஸ் கட்சியில் கவனம் செலுத்தவில்லை.

மேலிடத்திற்கு புகார்
அங்கு சென்று விடுவார்களோ, இங்கு சென்று விடுவார்களோ என ஓபிஎஸும் ஈபிஎஸும் பதற்றத்தில் இருக்கின்றனர். தளவாய் சுந்தரம் உள்ளிட்ட 3 பேரின் பேச்சை கேட்டால் இந்த கட்சி அழிந்துவிடும். மேலிடத்திற்கு நான் தெரிவிக்கும் புகார் இதுதான். வேறு எங்கும் தெரிவிக்க முடியாது. இவ்வாறு எம்எல்ஏ சண்முகநாதன் தெரிவித்தார்












Click it and Unblock the Notifications