இன்று மாலை 3 மணிக்கு அதிமுக எம்.எம்.ஏ.,க்கள், மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திற்கு தினகரன் அழைப்பு
அதிமுக எம்எல்ஏ, மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார் டிடிவி தினகரன்.
சென்னை: தமிழகத்தில் பரபரப்பான அரசியல் சூழல் நிலவி வரும் நிலையில், இன்று மாலை 3 மணிக்கு அ.தி.மு.க., எம்.எம்.ஏ.,க்கள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திற்கு டிடிவி தினகரன் அழைப்பு விடுத்துள்ளார்.
அதிமுகவின் இரு அணிகளும் இணைவதற்காக முழுவீச்சில் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்தச் சூழலில் தமிழக அமைச்சர்கள் தங்கமணி, ஜெயக்குமார், வேலுமணி, சி.வி சண்முகம் உள்ளிட்ட அமைச்சர்கள் தினகரனுக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளனர். இதையடுத்து சசிகலா குடும்பத்தை ஒதுக்கி வைப்பதாக எடப்பாடி தலைமையில் நடைபெற்ற அமைச்சர்கள் கூட்டத்தில் முடிவு செய்துள்ளதாக அதிகார பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வீட்டில் தமிழக அமைச்சர்கள் ஜெயக்குமார், சிவி.சண்முகம் உள்ளிட்டோர் செய்தியாளர்களிடம் பேசினர். அப்போது சசிகலா குடும்பத்தை கட்சி மற்றும் ஆட்சியிலிருந்து ஒதுக்கி வைப்பதாக அவர்கள் தெரிவித்தனர். சசிகலா குடும்பத்தின தலையீடு ஆட்சியிலும் கட்சியிலும் எள்ளளவும் இருக்கக்கூடாது என அவர்கள் தெரிவித்தனர்.
இதனிடையே அதிமுக துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரனின் அடையாறு வீட்டில் அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் ஆலோசனை நடத்தினர். இதில் எம்எல்ஏக்கள் ஜக்கையன், தங்கத்தமிழ் செல்வன், கதிர்காமு, வெற்றிவேல், செல்வ மோகன்தாஸ், சாத்தூர் சுப்ரமணியன், ஏழுமலை, சின்னத்தம்பி மற்றும் டெல்லி பிரதிநிதி தளவாய் சுந்தரம், அதிமுக அம்மா அணி செய்தித் தொடர்பாளர் நாஞ்சில் சம்பத் ஆகியோர் கலந்துகொண்டனர்.
ஆலோசனை கூட்டம் முடிந்த நிலையில் டிடிவி தினகரன் செய்தியாளர்களை சந்திப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் இன்று அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெறும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று பிற்பகல் 3 மணிக்கு எம்.எல்.ஏக்கள், மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்துக்கு தினகரன் அழைப்பு விடுத்துள்ளார். இந்தக் கூட்டத்துக்கு பின்னர் முக்கிய முடிவுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications