அதிமுகவினரை ஜெயலலிதா அடக்கி ஒடுக்கி வைத்ததில் தப்பே இல்லை பாஸ்!
பதவிக்காக அடித்துக் கொள்ளும் அதிமுகவினரை ஜெயலலிதா அடக்கி ஒடுக்கி வைத்தது நிச்சயம் தப்பே இல்லைதான்.
சென்னை: அதிமுகவினரை ஜெயலலிதா அடக்கி வைத்திருந்தது சரிதான்... அந்த அளவுக்கு பதவி வெறிக்காக அடிமைகளாக இருந்தார்கள் என்பதை அவரது மறைவுக்கு பின்னர் அரங்கேறும் சம்பவங்கள் வெளிப்படுத்தி வருகின்றன.
ஜெயலலிதா மறைந்த உடனேயே சசிகலாவை சின்னம்மா... நீங்கதான் கட்சியை காப்பாற்றனும்... வாங்க... வாங்கன்னு இருகரம் கூப்பி கெஞ்சி கூத்தாடினார்கள் அதிமுகவினர். அப்பட்டமாக போலியான ஒரு நாடகம் போயஸ் கார்டனில் அரங்கேற்றப்பட்டது.
போயஸ் கார்டனில் தினமும் அதிமுகவினர் கூழை கும்பிட்டு போட்டு நிற்பதும் சசிகலா ரட்சகியாக காட்சி தருவதுமான சகிக்க முடியாத காட்சிகள் அரங்கேறின. ஒருகட்டத்தில் சசிகலா, ஜெயலலிதாவைப் போல நடை உடை என அனைத்தையும் மாற்றிக் கொண்டு டூப்ளிகேட்டாக வலம் வந்தார்.
சின்னம்மா சின்னம்மா
அதுவரை அம்மா புகழ்பாடியவர்கள், ஜெயலலிதாவெல்லாம் சும்மா, அவங்களுக்கே தாய், அம்மா சின்னம்மாதான் என கூத்தடிக்கத் தொடங்கினர். ஒருகட்டத்தில் ஓபிஎஸ் வசம் இருந்த முதல்வர் பதவி பிடுங்கப்பட்ட உடன் குய்யோ முறையோ என கூப்பாடு போட்டு பதவியில் இல்லாதவர்களை தம் பக்கம் சேர்த்துக் கொண்டு புனிதராக காட்டிக் கொண்டார்.
ஓபிஎஸ் கோஷ்டியில் ஜீரோக்கள்
அதிமுகவில் எந்த பதவியிலும் இல்லாத ஓரங்கட்டப்பட்ட ஒதுக்கப்பட்டவர்கள் அத்தனை பேரும் ஒருசேர ஓபிஎஸ்ஸுடன் இணைந்தனர். இன்னொரு பக்கம் எப்படியாவது முதல்வர் நாற்காலியில் அமர்ந்தேவிட வேண்டும் என எம்.எல்.ஏக்கள் அனைவரையும் கூவத்தூரில் கொண்டுபோய் சிறைவைத்தார் சசிகலா. சசிகலா முதல்வரானால் தங்களுக்கும் அமைச்சர் பதவி கிடைக்கும் என்கிற பதவி வெறியுடன் அதிமுக எம்.எல்.ஏக்கள் அங்கே அடைபட்டுக் கிடந்தனர்.
தினகரனின் பேராசை
சசிகலா சிறைக்குப் போன நிலையில் எடப்பாடி முதல்வரானார். அவரது அமைச்சரவையில் பதவி தந்தாக வேண்டும் என கோஷம் போட்டு கோஷ்டி கோஷ்டியாக அதிமுக எம்,எல்.ஏக்கள் கூட்டம் போடுகிறார்கள். இவர்களில் தினகரனும் கைகோர்த்து கோதாவில் குதித்து ஆர்கே நகர் எம்.எல்.ஏவாக ஆசைப்பட்டு பணத்தை வாரி இறைத்தார். பரிதாபமான முடிவுதான் அவருக்கு கிடைத்தது.
கோட்டை அடிதடி
இப்போதும் அமைச்சர் பதவி கிடைக்கவில்லையே என்கிற ஆதங்கத்தில்தான் தினகரனுக்கு ஜால்ரா போடுகிறார்கள் எம்.எல்.ஏக்கள். இதன் உச்சமாகத்தான் கோட்டையில் கட்டி புரண்டு அடிதடியில் இறங்கியிருக்கிறார்கள் அதிமுகவினர். இப்படி பதவி ஒன்றுக்காக மட்டுமே அதிமுகவில் விசுவாசியாக நடிப்பவர்களை ஜெயலலிதா அடிமைகளாகவே நடத்தியதில் தப்பேதும் இல்லை என்று சொல்லலாம்!