அங்க அவ்வளோ அமளி, துமளி நடக்குது.. கம்முன்னு கை கட்டி வேடிக்கை பார்த்த அதிமுக எம்.எல்.ஏக்கள்
சட்டசபையில் பட்ஜெட் தாக்கலின் போது எதிர்க்கட்சியினர் கடும் அமளியில் ஈடுபட்ட போதும் அதிமுகவினர் வழக்கம்போர் கைகட்டி அமைதி காத்தனர்.
சென்னை: சட்டசபையில் பட்ஜெட் தாக்கலின் போது எதிர்க்கட்சியினர் கடும் அமளியில் ஈடுபட்டனர். அப்போது அதிமுகவினர் வழக்கம் போல கையைக் கட்டிக்கொண்டு அமைதியாக அமர்ந்திருந்தனர்.
சசிகலா தரப்பின் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான தமிழக அரசு இன்று சட்டசபையில் பட்ஜெட்டை தாக்கல் செய்தது. நிதியமைச்சர் ஜெயகுமார் பட்ஜெட் உரையை தாக்கல் செய்தார்.
சபை கூடியதுமே எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவதுக்குறித்து வலியுறுத்தினார். ஆனால் இதற்கு மறுப்பு தெரிவித்த சபாநாயகர் பட்ஜெட் தாக்கல் செய்ய அனுமதித்தார்.

சசிக்கு நன்றி தெரிவித்த அமைச்சர்
இதையடுத்து அமைச்சர் ஜெயகுமார் பட்ஜெட் உரையை வாசித்தார். அப்போது மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு புகழாரம் சூட்டிய அவர் சொத்துக்குவிப்பு வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அதிமுக பொதுச்செயலாளர் சசிகலாவுக்கும், துணைப் பொதுச்செயலாளர் டிடிவி.தினகரனுக்கும் நன்றி தெரிவித்தார்.

அமளியில் ஈடுபட்ட எதிர்க்கட்சிகள்
இதனைக் கண்டித்து திமுக மற்றும் ஓபிஎஸ் அதிமுகவினர் கடும் அமளியில் ஈடுபட்டனர்.குற்றவாளிகள் பெயரை உச்சரிக்க எதிர்ப்பு தெரிவித்த எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் சசிகலா, டிடிவி தினகரன் பெயரை அவைக்குறிப்பில் இருந்து நீக்க வலியுறுத்தினார்.

கைக்கட்டி வேடிக்கை பார்த்த அதிமுகவினர்
எதிர்க்கட்சியினரின் அமளியால் பட்ஜெட் தாக்கல் 2 முறை நிறுத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து கடும் கூச்சல் குழப்பத்துக்கு இடையே அமைச்சர் ஜெயகுமார் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார். இத்தனை அமளிதுமளிகளையும் அதிமுகவினர் அமைதியாக கைக்கட்டி வேடிக்கை பார்த்தனர்.

அப்போதும் இப்படித்தான்
கடந்த மாதம் சட்டசபையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பின் போதும் எதிர்க்கட்சியினர் கடும் அமளியில் ஈடுப்பட்டனர். நாற்காலிகள் டேபிள்கள் வீசப்பட்டனர். சட்டைக்கிழிப்பு சம்பவங்களும் அரங்கேறின. அப்போதும் அதிமுக எம்எல்ஏக்கள் அமைதியாகவே வேடிக்கை பார்த்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications