ஜெ.வை அவதூறாகப் பேசுவதா.. பிரேமலதா தங்கிய ஹோட்டலை முற்றுகையிட்ட அதிமுகவினர்
சேலம்: முதல்வர் ஜெயலலிதாவை அவதூறாகப் பேசி வருவதைக் கண்டித்து சேலத்தில் தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மனைவி பிரேமலதா தங்கியிருந்த ஹோட்டலை முற்றுகையிட்டு அதிமுகவினர் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
தமிழக சட்டசபைத் தேர்தலையொட்டி மக்கள் நலக்கூட்டணியுடன் தேமுதிக கூட்டணி அமைத்துள்ளது. இதையடுத்து தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் தேமுதிக மகளிர் அணி செயலாளரும், அக்கட்சித் தலைவர் விஜயகாந்தின் மனைவியுமான பிரேமலதா பங்கேற்று பேசி வருகிறார்.
தொடர்ந்து அதிமுகவையும், முதல்வர் ஜெயலலிதாவையும் பிரேமலதா பிரச்சாரக் கூட்டங்களில் விமர்சித்து வருவது அதிமுகவினர் இடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், சேலத்தில் பிரேமலதா தங்கியிருந்த தனியார் ஹோட்டலை இன்று அதிமுகவினர் சிலர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், போராட்டத்தில் ஈடுபட்டவர்களைக் கலைந்து போகச் சொன்னார்கள். அப்போது போலீசாருக்கும் அதிமுகவினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.