போனிலும் வந்து நீங்கள் செய்வீர்களா... செய்வீர்களா என்று கேட்கும் “அம்மா”
சென்னை: முதல்வர் ஜெயலலிதா தேர்தல் பிரசாரக் கூட்டங்களில் கேட்கும் நீங்கள் செய்வீர்களா, செய்வீர்களா என்ற வார்த்தை மக்களிடையே பிரபலமாகியுள்ள நிலையில் தற்போது அம்மா வாய்ஸ் சேவையிலும் ஒலிக்கும் முதல்வர் ஜெயலலிதாவின் குரல், மறக்காமல் இந்த செய்வீர்களா நீங்கள் செய்வீர்களா என்று கேட்டு வருகிறது.
‘அம்மா' வாய்ஸ் என்னும் இந்தத் தேர்தல் பிரசார சேவை, தேர்தல் வரை 24 மணி நேரமும் கேட்கக்கூடிய வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
நாம் தொலைபேசியில் அழைத்து ஜெயலலிதாவின் நேரடிக் குரலை கேட்க 9543 778899 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இந்த "அம்மா" வாய்ஸ் சேவைக்கு நல்ல கிராக்கி ஏற்பட்டுள்ளதாம்.
சரி இந்த தொலைபேசி பேச்சில் ஜெயலலிதா என்னதான் பேசுகிறார். இதோ இப்படித்தான் பேசுகிறார் ஜெயலலிதா:

எனதருமை வாக்காளர் பெருமக்களே:
எனதருமை வாக்காளர் பெருமக்களே. உங்களை ஏமாற்ற நினைக்கும் தி.மு.க.வுக்கு வருகின்ற மக்களவை தேர்தலில், இனிமேல் எழுந்திருக்க முடியாத அளவுக்கு மரணஅடி கொடுக்க வேண்டும் என்று உங்களை எல்லாம் கேட்டுக்கொள்கிறேன். செய்வீர்களா?, நீங்கள் செய்வீர்களா?.

40 தொகுதிகளிலும் வெல்ல வையுங்கள்:
அ.தி.மு.க.வை 40 தொகுதிகளிலும் நீங்கள் வெற்றிபெற செய்ய வேண்டும் என்று உங்களை அன்புடன் வேண்டி விரும்பிக் கேட்டுக்கொள்கிறேன்.

உங்கள் சின்னம் இரட்டை இலை:
மறவாதீர் உங்கள் சின்னம் இரட்டை இலை. நன்றி வணக்கம் இப்படிப் பேசுகிறார் ஜெயலலிதா.

புதன்கிழமை முதல் அறிமுகம்:
இந்த வசதி புதன்கிழமை முதல் அறிமுகப்பட்டுள்ளது. அந்த வசதியைப் பயன்படுத்தி ஒரே நாளில் ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர், முதல்வரின் பேச்சுக்களை கேட்டிருக்கிறார்கள் என அதிமுக தலைமைக்கழக நிர்வாகிகள் அறிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications