ஜெயலலிதா மட்டுமே பொதுச்செயலாளர்... டிடிவி தினகரனை ஏற்கவே மாட்டோம்- ஓபிஎஸ்
ஜெயலலிதாவைத் தவிர அதிமுக பொதுச்செயலாளராக அந்த இருக்கையில் அமர யாருக்கும் தகுதியில்லை என்று ஒ.பன்னீர் செல்வம் கூறியுள்ளார்.
சென்னை: அதிமுகவின் பொதுச்செயலாளராக இருந்த ஜெயலலிதா மரணமடைந்தாலும் வேறொருவர் தேர்வு செய்யப்படும் வரை அவர்தான் பொதுச்செயலாளர் என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் கூறியுள்ளார். ஜெயலலிதா நீக்கியவர்களை துணைப் பொதுச்செயலாளராக ஏற்க முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதாவின் 69வது பிறந்தநாளை சென்னை ஆர்.கே.நகரில் ஓபிஎஸ் தலைமையிலான அணியினர் கொண்டாடினர். நலத்திட்ட உதவிகளையும் பேசினர். அன்னதானம் வழங்கப்பட்டது.

இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பன்னீர் செல்வம் தாங்கள்தான் உண்மையான அதிமுக என்று கூறினார். 122 எம்எல்ஏக்கள் மட்டுமே அவர்கள் பக்கம் இருக்கின்றனர். எங்கள் பக்கம் தொண்டர்கள் இருக்கின்றனர்.
அதிமுக பொதுச்செயலாளராக இருந்த ஜெயலலிதா மரணமடைந்தாலும் தேர்தல் நடத்தி வேறொருவரை தேர்வு செய்யும் வரை அவர் மட்டுமே பொதுச்செயலாளர். அவருடைய இருக்கையில் அமர யாருக்குமே தகுதியில்லை என்று கூறினார்.
டிடிவி தினகரன் அழைப்பு விடுத்துள்ளது பற்றி கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த ஓ.பன்னீர் செல்வம், கட்சியில் ஜெயலலிதாவினால் நீக்கப்பட்ட ஒருவரை நாங்கள் துணைப்பொதுச்செயலாளராக ஏற்றுக்கொள்ள மாட்டோம். கட்சிலேயே இல்லாத ஒருவர் எப்படி எங்களுக்கு அழைப்பு விடுக்க முடியும் என்றார்.
நாங்கள்தான் உண்மையான அதிமுக என்று கூறிய ஓ.பன்னீர் செல்வம், கட்சியின் தலைமை அலுவலகம் தானாக தங்களைத் தேடி வரும் என்று கூறினார்.












Click it and Unblock the Notifications