ஆர்கேநகரில் அதிமுகவை எதிர்ப்போருக்கு டெபாசிட் காலி.. வைகைச்செல்வன் வீராவேசம்
ஆர்கே.நகரில் அதிமுக மகத்தான வெற்றியை பெறும் அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் வைகைச் செல்வன் தெரிவித்துள்ளார்.
சென்னை: ஆர்கே.நகரில் அதிமுக மகத்தான வெற்றியை பெறும் அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் வைகைச் செல்வன் தெரிவித்துள்ளார். அதிமுகவை எதிர்த்து போட்டியிடுபவர்களை டெபாசிட் இழக்கச்செய்வோம் என்றும் அவர் கூறியுள்ளார்.
ஆர்கே.நகர் தொகுதி எம்ல்ஏவாக இருந்த ஜெயலலிதா உடல்நலக்குறைவால் உயிரிழந்ததையடுத்து அந்த தொகுதி காலியாக இருந்தது. இந்நிலையில் ஏப்ரல் 12ஆம் தேதி அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக அதிமுக செய்தி தொடர்பாளர் வைகைச்செல்வன் இன்று செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது இடைத்தேர்தலை அதிமுக உரிய முறையில் சந்திக்கும் என அவர் கூறினார்.
அதிமுக பொதுச்செயலாளராக உள்ள சசிகலாவின் ஆலோசனையை பெற்று களப்பணி தொடங்கும் என்றும் அவர் தெரிவித்தார். மேலும் இடைத்தேர்தலில் அதிமுக மகத்தான வெற்றி பெறும் என்றும் வைகைச்செல்வன் உறுதியாக கூறினார்.
மேலும் ஆர்கே.நகர் இடைத்தேர்தலில் அதிமுகவை எதிர்த்து போட்டியிடுபவர்களை டெபாசிட் இழக்கச்செய்வோம் என்றும் வைகைச் செல்வன் தெரிவித்துள்ளார்.