லோக்சபா தேர்தல் பிரசாரம்: அத்வானி, ராகுல், யெச்சூரி, டி. ராஜா இன்று தமிழகம் வருகை!
சென்னை: லோக்சபா தேர்தல் பிரசாரம் முடிவடைய இருக்கும் நிலையில் இன்று பாஜக மூத்த தலைவர் அத்வானி, காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல், இடதுசாரி தலைவர்கள் யெச்சூர், டி. ராஜா ஆகியோர் இன்று தமிழகத்தில் பிரசாரம் மேற்கொள்ள இருக்கின்றனர்.
தமிழகத்தில் லோக்சபா தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் 24-ந் தேதி நடக்கிறது. இதற்கான பிரச்சாரம் நாளை மாலை 5 மணியுடன் முடிகிறது. பிரச்சாரத்துக்கு இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில், தேசிய மற்றும் தமிழக அரசியல் தலைவர்கள் இறுதிக்கட்ட வாக்கு சேகரிப்பில் தீவிரம் காட்டி வருகின்றனர்.
பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடி, 3 நாட்கள் தமிழகத்தில் பிரச்சாரம் மேற்கொண்டார். பாஜக தலைவர் ராஜ்நாத் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோரும் பிரச்சாரத்துக்காக தமிழகம் வந்து சென்றனர்.
இந்நிலையில், பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி, வேலூர் தொகுதி வேட்பாளர் ஏ.சி.சண்முகத்தை ஆதரித்து இன்று பிரச்சாரம் செய்கிறார். இன்று பகல் 1.30 மணிக்கு தனி விமானத்தில் சென்னை வரும் அத்வானி, அங்கிருந்து ஹெலிகாப்டரில் வேலூர் செல்கிறார். வி.ஐ.டி.கல்லூரி மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள ஹெலிபேடில் இறங்குகிறார். பின்னர், வேலூர் பழைய பேருந்து நிலையம் அருகிலுள்ள மண்டி தெருவில் மாலை 3.30 மணிக்கு நடக்கும் பிரச்சாரக் கூட்டத்தில் அத்வானி பேசுகிறார்.
காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, டெல்லியிலிருந்து விமானம் மூலம் இன்று காலை 10.20 மணிக்கு மதுரை வருகிறார். அங்கிருந்து ஹெலிகாப்டரில் ராமநாதபுரம் சென்று, பேருந்து நிலையம் அருகில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் வேட்பாளர் திருநாவுக்கரசரை ஆதரித்து பேசுகிறார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொலிட் பீரோ உறுப்பினரும் மூத்த தலைவருமான சீதாராம் யெச்சூரி, விழுப்புரத்தில் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளரை ஆதரித்துப் பேசுகிறார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செய லாளர் சுதாகர் ரெட்டி கடலூரிலும், தேசிய செயலாளர் டி.ராஜா பரமக் குடியிலும் நடக்கும் பிரச்சாரக் கூட்டங்களில் பங்கேற்கின்றனர்
இதேபோல் பாஜக முன்னாள் தலைவர் நிதின் கட்காரியும் தமிழகத்தில் தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள இருக்கிறார்.