பொது இடத்தில் அனுமதியின்றி தேர்தல் விளம்பரம் செய்தால் ஓராண்டு சிறை - ராஜேஷ் லக்கானி
சென்னை: மாநகராட்சி, நகராட்சி பகுதிகளில் பொது இடங்களில் அனுமதியின்றி தேர்தல் விளம்பரம் செய்தால் அதிகபட்சமாக ஓராண்டு சிறைத் தண்டனை அல்லது 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி எச்சரித்துள்ளார்.
தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தன. இதையடுத்து வருவாய்த் துறை அதிகாரிகள் கொண்ட பறக்கும் படையினர் தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

முறையான ஆவணம் இன்றி எடுத்துச் செல்லப்படும் பணம் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. உரிய ஆவணங்களை காண்பித்து கைப்பற்றப்பட்ட பணத்தை பெற்றுக்கொள்ளலாம் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொது இடங்களில் அனுமதியின்றி போஸ்டர்கள், துண்டு பிரசுரங்கள், விளம்பர தட்டிகள் போன்றவற்றை வைக்கக்கூடாது என ராஜேஷ் லக்கானி கூறியுள்ளார்.
சென்னை, மதுரை, கோவை உள்ளிட்ட மாநகராட்சிகளில் தேர்தல் விளம்பரம் செய்ய விரும்புபவர்கள், சம்பந்தப்பட்ட மாநகர காவல் துறை ஆணையர்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர்களிடம் அனுமதிப் பெற வேண்டும். அனுமதி கிடைத்த பின்னரே விளம்பரம் செய்ய வேண்டும் என அவர் கூறியுள்ளார்.
இதனிடையே, தேர்தல் நேரத்தில் பின்பற்ற வேண்டிய நெறிமுறைகள் குறித்து, சென்னையில் அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன், மாவட்ட தேர்தல் அதிகாரி சந்திரமோகன் ஆலோசனை நடத்தினார். இதில், அதிமுக, திமுக, தேமுதிக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் பொது நடத்தை, தேர்தல் பிரச்சாரம், அச்சக விளம்பரம், கல்வி நிலையங்கள், பொருட்கள் விநியோகம் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டன.












Click it and Unblock the Notifications