3 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்த வக்கீல்.. மனைவிகள் தர்ம அடி
பெரம்பூர் அருகே 2வது திருமணத்தை மறைத்து மூன்றாவது திருமணம் செய்த வக்கீல் தர்ம அடி வாங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
பெரம்பூர்: 3 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்துகொண்ட சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மவுலிவாக்கத்தை சேர்ந்தவர் 40 வயதான வெங்கட்ராமன். வழக்கறிஞர் தொழில் செய்து வருகிறார். இவர் கோயம்பாக்கத்தை சேர்ந்த ஒரு பெண்ணை கடந்த 2014ல் திருமணம் செய்து கொண்டார். திருமணம் நடந்து 11 மாதம் ஆன நிலையில் குழந்தை இல்லை. இதனால் வெங்கட்ராமனை விட்டு அந்த பெண் பிரிந்து சென்றுவிட்டார். இதையடுத்து இசையரசி(32) என்வரை கடந்த ஜனவரி மாதம் 2வது திருமணம் செய்துள்ளார் வெங்கட்ராமன்.
இந்த நிலையில் 2வது திருமணத்தை மறைத்து வியாசர்பாடி சேர்ந்த உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ஜெயந்தி (36) என்பவரை கடந்த 6ம் தேதி வெங்கட்ராமன் திருமணம் செய்துள்ளார். இதையறிந்த இசையரசி மற்றும் அவரது உறவினர்கள், ஜெயந்தியிடம் நடந்த விவரத்தை கூறியுள்ளனர்.
இதனால் ஆத்திரமடைந்த ஜெயந்தி மற்றும் இசையரசி குடும்பத்தினர் வெங்கட்ராமனை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த வியாசர்பாடி போலீசார், காயத்துடன் இருந்த வெங்கட்ராமனை மீட்டு ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து எம்கேபி நகர் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் இரு பெண்களும் புகார் செய்தனர்.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், வெங்கட்ராமன் வேறு யாரை எல்லாம் ஏமாற்றி திருமணம் செய்துள்ளார் என பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.