ஜெ. மர்ம மரணம்: அப்பல்லோ பிரதாப்ரெட்டி மீது கிரிமினல் வழக்கு தொடர கோரி வக்கீல் மனு!
ஜெயலலிதா மரணம் தொடர்பாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையின் தலைமை நிர்வாக இயக்குநர் பிரதாப் ரெட்டி மீது குற்றவியல் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று திண்டுக்கல் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் புகார் ம
திண்டுக்கல்: ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த விவகாரம் தொடர்பாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையின் தலைமை நிர்வாக இயக்குநர் பிரதாப் ரெட்டி மீது குற்றவியல் வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்று திண்டுக்கல் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் புகார் மனு கொடுக்கப்பட்டுள்ளது.
ஜெயலலிதா கடந்த செப்டம்பர் மாதம் 22-ஆம் தேதி காய்ச்சல், நீர் சத்து குறைபாடு ஆகியவற்றால் பாதிக்கப்பட்டு சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இதனால் கவலையடைந்த தொண்டர்கள், மக்கள் அப்பல்லோ மருத்துவமனை முன்பு குவிந்தனர்.
இந்நிலையில் சில நாள்கள் கழித்து ஜெயலலிதா நன்றாக உள்ளார், சிகிச்சைகளுக்கு ஒத்துழைப்பு அளிக்கிறார், திட உணவுகளை உண்கிறார் என்று மருத்துவமனை நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது. பின்னர் உடல்நிலை முன்னேற்றம் அடைந்துள்ளதால் அவர் அவசர சிகிச்சை பிரிவில் இருந்து தனிவார்டுக்கு மாற்றப்பட்டார் என்றும் அவர் விரும்பும்போது போயஸ் தோட்டத்துக்கு செல்லலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து தொண்டர்கள் சற்று நிம்மதி அடைந்தனர்.
இந்நிலையில் 75 நாள்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற ஜெயலலிதாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டு கடந்த டிசம்பர் 5-ஆம் தேதி காலமானார். ஆனால் அப்பல்லோ மருத்துவமனை, எய்ம்ஸ் மருத்துவமனை ஆகியன அறிக்கைகள் வெளியிட்ட பிறகும் ஜெயலலிதா மரணம் குறித்து சந்தேகம் தீர்ந்தபாடில்லை. இது பெரும் சர்ச்சையாக நீடிக்கிறது.
இந்நிலையில் திண்டுக்கல் வளரும் சமூக வக்கீல்கள் சார்பில் மாநில செயலாளர் செபாஸ்டின் இன்று திண்டுக்கல் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளரிடம் ஒரு புகார் மனு கொடுத்து உள்ளார். அதில் கூறியிருப்பதாவது:
சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் 75 நாட்கள் சிகிச்சை பெற்ற மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகளில் பல்வேறு முரண்பட்ட தகவல்கள் வெளியாகி உள்ளது. இது மக்களை ஏமாற்றும் செயல் ஆகும். எனவே அப்பல்லோ இயக்குனர் பிரதாப் ரெட்டி உள்பட அவருக்கு உடந்தையாக இருந்த அனைத்து மருத்துவர்கள் மீதும் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும் என்று அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.