மெட்ரோ ரயிலில் முதல் ஒரு வாரத்துக்கு இலவச பயணமா? பறக்கும் ரயிலைப் பற்றி றெக்கை கட்டி பறக்கும் தகவல்.
சென்னை : மெட்ரோ ரயிலை பயணிகளிடலில் பிரபலப்படுத்த முதல் ஒரு வாரத்துக்கு பயணிகள் இலவச பயணம் மேற்கொள்ள புதிய திட்டம் வகுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சென்னையில் ரூ. 20 ஆயிரம் கோடி செலவில் மெட்ரோ ரயில் திட்டப்பணிகள் நடைபெற்று வருகிறது.

இரண்டு வழித்தடங்களாக நடைபெற்று வரும் இந்த பணிகளில் கோயம்பேடு - ஆலந்தூர் இடையேயான மெட்ரோ ரயில் பாதை முடிக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளது.
இன்னும் 2 வாரங்களில் அதாவது ஜூலை முதல் வாரம் கோயம்பேடு - ஆலந்தூர் இடையேயான மெட்ரோ ரயில் போக்குவரத்து தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன.
தினமும் காலை 5 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும். இதற்காக 9 மெட்ரோ ரயில்கள் கோயம்பேடு பணிமனையில் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளன.
சென்னை மெட்ரோ ரெயில் திட்டம் தொடங்கப்பட்ட நாளில் இருந்தே இந்த சேவை எப்போது தொடங்கும் என்ற எதிர்பார்ப்பு சென்னை மக்களிடம் ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக அலுவலகங்களுக்கு வேலைக்கு செல்பவர்கள் மெட்ரோ ரயில் சேவையை மிக ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள். எனவே நடுத்தர மக்கள் மெட்ரோ ரெயில் சேவையை அதிகம் பயன்படுத்துவார்கள் என்று கணிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே அனைத்து தரப்பு பயணிகளையும் மெட்ரோ ரயில் பக்கம் ஈர்க்க வேண்டும் என்பதில் மெட்ரோ ரயில் நிர்வாகம் தீவிரமாக உள்ளது. இதற்காக பயணிகளிடம் மெட்ரோ ரயில் குறித்து பிரபலப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
அதன் ஒரு பகுதியாக அடுத்த மாதம் மெட்ரோ ரயில் சேவை தொடங்கியதும் முதல் ஒரு வாரத்துக்கு இலவச பயணத்துக்கு பொது மக்களை அனுமதிக்கலாமா என்ற ஆலோசனை நடைபெற்று வருகிறது.
இது பற்றி மெட்ரோ ரயில் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
சென்னையில் மெட்ரோ ரயில் சேவையை பிரபலப்படுத்த ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. இதற்காக மெட்ரோ ரயில் சேவை தொடங்கியதும் முதல் ஒரு வாரத்துக்கு பயணிகளை இலவசமாக அனுமதிக்கலாமா என்று பரிசீலினை செய்துள்ளோம். இது பற்றி தமிழக அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
பயணிகள் இலவச பயணம் செல்ல, எத்தனை நாட்களுக்கு சலுகை அளிப்பது என்பது பற்றி தமிழக அரசு முடிவு செய்து அறிவிக்கும். இந்த சலுகை திட்டம் பயணிகள் எண்ணிக்கையை அதிகரிக்க உதவும். இந்த திட்டம் அமல்படுத்தப்பட்டால், இந்தியாவில் முதன் முதலாக சென்னை பயணிகள் இலவசமாக மெட்ரோ ரயிலில் செல்லும் வாய்ப்பு கிடைக்கும். ஆனால் இதுவரை இதில் எந்த இறுதி முடிவும் எடுக்கப்படவில்லை.
இவ்வாறு அந்த அதிகாரி கூறினார்.












Click it and Unblock the Notifications