நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு.. ஆடிப்பெருக்கு நாளில் பெருகியோடும் காவிரித்தாய்
நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு இந்த ஆண்டு ஆடிப்பெருக்கு நாளில் காவிரித்தாய் பெருக்கெடுத்து ஓடுகிறாள்.
திருச்சி: ஆடிப்பெருக்கு நாளில் காவிரி 4 ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆண்டுதான் காவிரித் தாய் பெருக்கெடுத்து ஓடுகிறாள். அனைவரும் எல்லா வளமும் நலமும் பெற ஆடிப்பெருக்கு நாளில் காவிரித்தாயை வழிபடுங்கள்.
ஆடிப்பெருக்கு நாளில் காவிரி ஆற்றுக் கரையோர மக்கள் மட்டுமல்லாமல் பல மாவட்டங்களிலும் இருந்து மக்கள் காவிரி ஆற்றுக்கு வந்து வழிபட்டுச் செல்வார்கள்.
திருமணம் ஆகாத பெண்கள் விரைவில் திருமணம் ஆக வேண்டும் என்று வேண்டிக்கொண்டு கழுத்தில் மஞ்சள் கயிறு அணிந்து காவிரியில் நீராடி வழிபடுவார்கள்.
அதே போல திருமணம் ஆன பெண்கள் மாங்கல்யம் நிலைக்க வேண்டும் என வேண்டிக்கொண்டு காவிரி ஆற்றின் கரையில் வழிபட்டு புதிய மாங்கல்ய கயிறுகளை அணிந்து வழிபடுவார்கள்.
அந்த ஆண்டு புதிதாக திருமணம் ஆன தம்பதிகள் தங்களுடைய திருமண மாலை, திருமண சடங்கு பொருட்களைக் கொண்டுவந்து, காதோலை, கருகமணி ஆகியவற்றை வைத்து படைத்து காவிரி ஆற்றில் விட்டு வழிபடுவார்கள்.
விவசாயிகள், நல்ல மழை பெய்ய வேண்டும், செழிப்பாக இருக்க வேண்டும், மகிழ்ச்சியுடன் வாழ வேண்டும் என வேண்டிக்கொண்டு காவிரித் தாயை வேண்டிக்கொண்டு வழிபடுவார்கள்.
ஆடிப்பெருக்கு நாளில் காவிரிக் கரையோரம் எங்கும் மக்கள் கூட்டம் கூட்டமாக காவிரித் தாயை வழிபடுவது வழக்கம்.
அதுவும் ஆடிப்பெருக்கு நாளில் காவிரியில் இருகரையும் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடும் என்பது வழக்கமாக இருந்து வருகிறது.
ஆனால், கடந்த 4 ஆண்டுகளாக, பருவ மழை பொய்த்துப் போனதாலும், காவிரியில் கர்நாடகா அரசு தண்ணீர் திறந்து விடாததாலும் காவிரி ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடவில்லை.
2013 ஆண்டு மேட்டூர் அணை 113 அடி நிரம்பியதைத் தொடர்ந்து காவிரியில் தண்ணீர் திறந்துவிடப்பட்டது. அந்த ஆண்டு ஆடிப்பெருக்கு நாளில் காவிரி இரு கரையும் பெருக்கெடுத்து ஓடியது. அதன் பிறகு வந்த, 2014, 2015, 2016 ஆகிய மூன்று ஆண்டுகளும் ஆடிப்பெருக்குக்காக காவிரியில் தண்ணீர் திறந்துவிடப்பட்டது. அப்போது, பெரிய அளவில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடவில்லை. அது ஆடிப்பெருக்கு நாளில் மக்கள் வழிபாடு செய்வதற்கு போதுமானதாக மட்டுமே இருந்தது.
இதற்குப் பிறகு வந்த 2017 ஆம் ஆண்டு ஆடிப்பெருக்கு நாள் மிகவும் மோசமாக இருந்தது. அந்த ஆண்டு மேட்டூர் அணையிலும் தண்ணீர் இல்லை. பருவ மழையும் பொய்த்துப்போன நிலையில் ஆடிப்பெருக்கு நாள் தண்ணீர் இன்றி எப்படிக் கொண்டாடப்பட்டது என்பதைக் கேட்டால் பரிதாபமாக இருக்கும்.
2017 ஆம் ஆண்டில் காவிரியில் தண்ணீர் வராததால், ஆடிப்பெருக்கு நாள் கொண்டாடப்படும் காவிரிக் கரை படித்துறை இடங்களான திருச்சி அம்மா மண்டபம், சோமரசம் பேட்டை ஆகிய பகுதிகளில் திருச்சி மாவட்ட நிர்வாகம் போர் போட்டு மோட்டார் மூலம் செயற்கையாக தண்ணீரைத் தேக்கி மக்கள் வழிபட ஏற்பாடு செய்தது.
ஆடிப்பெருக்கு நாளில் காவிரியில் நீராட வந்தவர்கள், போர் தண்ணீரில் நீராடி வழிபட்டுச் சென்றார்கள். இதற்குப் பிறகு ஆடிப்பெருக்கு நாளில் காவிரியில் தண்ணீர் வருமோ வராதோ என்று ஏங்கிய மக்களுக்கு இந்த ஆண்டு இயற்கையே இறங்கியுள்ளது.
இந்த ஆண்டு காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்ததால் கர்நாடகா அரசு தமிழகத்துக்கு காவிரியில் தண்ணீர் திறந்துவிட்டது. இதனால், மேட்டூர் அணை முழுமையாக 120 அடி நிரம்பியது. இதையடுத்து காவிரியில் பாசனத்துக்காக தண்ணீர் திறந்துவிடப்பட்டு வருகிறது.
இதனால், 4 ஆண்டுகளுக்குப் பிறகு காவிரியில் இருகரையும் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்த 2018 ஆம் ஆண்டு ஆடிப்பெருக்கு நாள் ஆகஸ்ட் 3 ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது.
அந்த வகையில் இந்த ஆண்டு ஆடிப்பெருக்கு நாளில்தான் காவிரித் தாய் இருகரையும் பெருக்கெடுத்து ஓடுகிறாள். அனைவரும் ஆடிப்பெருக்கு நாளில் பெருக்கெடுத்து ஓடும் காவிரித்தாயை வழிபட்டு எல்லா நலமும் வளமும் பெறுங்கள்.