ஜெ. மறைவுக்குப் பின் அதிமுகவில் நாள்தோறும் திடுக் திடுக் திருப்பங்கள்!
ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் அதிமுகவில் அடுத்தடுத்து திடுக் திருப்பங்கள் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன.
சென்னை: ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் அதிமுகவில் அடுத்தடுத்து திடுக் திருப்பங்கள் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன.
ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுகவில் அதிரடி மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. குறிப்பாக அதிமுக பொதுச்செயலாளராக சசிகலா பதவியேற்றப்பின் பல மாற்றங்கள் ஏற்பட்டன.
ஓ.பன்னீர்செல்வம் முதல்வர் பதவியை கடந்த பிப்ரவரி 5-ந் தேதி ராஜினாமா செய்தார். இதைத்தொடர்ந்து அதிமுக சட்டமன்றக் குழுத் தலைவரானார் சசிகலா.
ஓபிஎஸின் தியானம்
பிப் 7, 2017 - ஜெயலலிதா சமாதியில் ஓ.பன்னீர்செல்வம் தியானம் திடீர் தியானம் மேற்கொண்டார். இதைத்தொடர்ந்து தன்னை கட்டாயப்படுத்தி ராஜினாமா செய்ய வைத்ததாக அதிரடியாக பேட்டியளித்தார்.
உரிமை கோரிய சசிகலா
பிப் 9, 2017 - ஆளுநரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினார் சசிகலா. அப்போது அதிமுக எம்எல்ஏக்கள் அனைவரும் கூவத்தூர் ரிசார்ட்டில் அடைத்து வைக்கப்பட்டிருந்தனர்.
சசிகலாவுக்கு சிறை
பிப் 14, 2017 - சொத்துக்குவிப்பு வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. சசிகலாவுக்கு சிறைத் தண்டனை உறுதிப்படுத்தப்பட்டது.
ஓபிஎஸ் ராஜினாமா ஏற்பு
பிப் 15, 2017 - முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் ஓ.பன்னீர்செல்வம். முதல்வரின் ராஜினாமா கடிதத்தை ஏற்றுக்கொண்டதாக ஆளுநரிடம் இருந்தும் அறிவிப்பு வந்தது.
டிடிவி தினகரன் வசமானது கட்சி
பிப் 16 - அதிமுக துணைப் பொதுச் செயலாளராக டிடிவி தினகரனை நியமித்தார் சசிகலா. வெங்கடேஷையும் கட்சியில் சேர்த்து சசிகலா அறிவிப்பு வெளியிட்டார்.
முதல்வரானார் எடப்பாடி
பிப் 17, 2017 - எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக பொறுப்பேற்றார். பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் எடப்பாடி மற்றும் அவரது தலைமையிலான அமைச்சர்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
நம்பிக்கை வாக்கெடுப்பு
பிப் 18, 2017 - சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது. அப்போது எதிர்க்கட்சிகள் ரகளையில் ஈடுபட்டன. இதையடுத்து எதிர்க்கட்சிகள் இன்றி நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் எடப்பாடி பழனிசாமி அரசு வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
இரட்டை இலை முடக்கம்
மார்ச் 22, 2017 - ஆர்கே நகர் தேர்தலில் இரட்டை இலை யாருக்கும் இல்லை என தேர்தல் ஆணையம் அறிவித்தது. ஏப் 7, 2017 - அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் வருமான வரித் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
ஆர்கே நகர் இடைத்தேர்தல் ரத்து
ஏப் 10, 2017 - வாக்காளருக்கு பண வினியோக புகாரில் ஆர் கே நகர் இடைத்தேர்தலை தேர்தல் ஆணையம் ரத்து செய்தது. ஏப் 24 - அதிமுகவில் இருந்து விலகியிருக்கப் போவதாக டிடிவி தினகரன் அறிவித்தார்.
டிடிவி தினகரன் கைது
ஏப் 26, 2017 - இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் தர முயன்ற புகாரில் டிடிவி தினகரன் கைது செய்யப்பட்டார். ஏப் 27, 2017 - அதிமுக அணிகள் இணைப்பு குறித்து அதிகாரபூர்வமற்ற பேச்சுவார்த்தைகள் தொடக்கம் என என தகவல் வெளியானது.
அணிகள் இணைய அவகாசம்
சிறையில் இருந்து டிடிவி தினகரன் வெளியே வந்தபிறகு 37 எம்எல்ஏக்கள் நேரில் ஆதரவு தெரிவித்தனர். பெங்களூரு சிறையில் சசிகலாவை சந்தித்த தினகரன் அணிகள் இணைய ஆகஸ்ட் 4 ஆம் தேதி வரை அவகாசம் தந்து ஒதுங்கியிருக்கப்போவதாக தெரிவித்தார்.
மீண்டும் அதிரடி திருப்பங்கள்?
தற்போது ஆகஸ்ட் 5 ஆம் தேதி மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார் தினகரன். நிச்சயமாக இந்த கூட்டத்திற்கு பின் அதிமுகவில் மேலும் பல அதிரடி திருப்பங்கள் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.