வெளியேறிய பண்ருட்டி.. திமுகவுடனான தேமுதிக கூட்டணிக்கு ரூட் க்ளியர்?
சென்னை: பண்ருட்டி ராமச்சந்திரன் வெளியேறிவிட்டதன் மூலம் திமுகவுடன் தேமுதிக கை கோர்ப்பது வெகுதொலைவில் இல்லை என்கின்றன அரசியல் வட்டாரங்கள்.
பண்ருட்டி ராமச்சந்திரனைப் பொறுத்தவரை எம்.ஜி.ஆரை ஏற்றுக் கொண்ட நாள்முதல் திமுக ஆகாத ஒன்றாகவே ஆகிவிட்டது. எத்தனையோ அரசியல்வாதிகள் அதிமுகவில் இருந்து திமுகவுக்கும் திமுகவில் இருந்து அதிமுகவுக்கும் மாறி சென்றுவிட்டனர்.
ஆனால் திமுகவை விட்டு வெளியேறிய பின்னர் அதிமுகவில் இணைந்தார் பண்ருட்டி. பின்னர் பாட்டாளி மக்கள் கட்சியில் ஐக்கியமாகி மக்கள் நல உரிமைக் கழகம் என தனிக் கட்சி தொடங்கி பின்னர் தேமுதிகவில் இணைந்தாரே தவிர திமுகவுக்குப் போனது இல்லை. அண்மையில் கூட அதிமுக பொதுச்செயலரும் முதல்வருமான ஜெயலலிதாவை கூட புகழ்ந்து பேசினார் பண்ருட்டி.
ஆனால் ஒருபோதும் திமுகவுடன் நேசக்கரத்தை பண்ருட்டி ராமச்சந்திரன் நீட்டவே இல்லை. இந்த நிலையில்தான் தேமுதிகவை விட்டு வெளியேறிய பண்ருட்டி, தீவிர அரசியலைவிட்டே விலகப் போவதாகவும் அறிவித்திருக்கிறார். ஆனால் தேமுதிகவினரோ போனால் போகட்டும்.. என்ற பாணியிலேயே பண்ருட்டியாரின் வெளியேற்றத்தைப் பார்க்கின்றனர்..

திமுகவுக்கு நேசக்கரம்
பண்ருட்டியார் இருந்தவரை திமுகவுடனான நேசக்கரத்துக்கு ஆகப் பெரும் முட்டுக் கட்டையாகவே இருந்தவர் பண்ருட்டியார். இப்போது பாஜகவுடன் திமுக கரம் கோர்க்கப் போகிறது என்று செய்திகள் வெளியாகும் நிலையில் தேமுதிகவும் இந்த ஜோதியில் எளிதில் ஐக்கியமாகிவிட வாய்ப்பு இருக்கிறது.

அங்கிட்டு அதிமுகவில்..
திமுக- தேமுதிக கூட்டு பகிரங்கமாக இருக்கும் நிலையில் தமது வாரிசை அதிமுகவில் இணையவிட்டு 'வளமான' எதிர்காலத்துக்கு வழிஏற்படுத்திக் கொடுப்பார் பண்ருட்டி என்றும் அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தேமுதிக எதிர்காலம்?
பொதுவாக குட்டிக் கட்சிகள் அல்லது அனுபவற்ற அரசியல் தலைவர்கள், மூத்த அரசியல் தலைவர்கள், மூத்த பத்திரிகையாளர்களின் உதவியுடன் தான் அரசியல் இருப்பை "அறிக்கைகள்" வாயிலாக வெளிப்படுத்தி வருகின்றனர். இவ்வளவு காலமும் தேமுதிகவுக்கு அப்படி சிக்கிய நல்ல அடிமைகளில் ஒருவராக இருந்தவர் பண்ருட்டி ராமச்சந்திரன். ஆனால் அவரைப் போன்ற அனுபவசாலி அந்த கட்சியிலோ, அல்லது தேமுதிகவின் ஊடகங்களிலோ எவருமே இல்லை என்பது கண்கூடும். இருந்தாலும் வாய்மூடி மவுனியாக இருப்பதையே ஒரு கூட ஒரு தற்காப்பாக கடைபிடித்து அரசியலில் நீந்திக் கொண்டிருக்க கேப்டன் விஜயகாந்த் முயற்சிக்கலாம்.

இன்னிங்ஸ் இடைவெளிதான்..
ஆக பண்ருட்டி ராமச்சந்திரனைப் பொறுத்தவரை இந்த இன்னிஸ்சின் இடைவெளிதான் என்கின்றனர் அவரது ஆதரவாளர்கள். தீவிர அரசியலில் இருந்து ஓய்வு என்பது அறிவிப்பாக இருந்தாலும் விரைவில் இன்னொரு இன்னிங்ஸும் விளையாட வாய்ப்பு இருக்கிறது என்கின்றனர். அரசியலில்தான் எதுவுமே நிரந்தரமில்லையே..












Click it and Unblock the Notifications