சாலைகளில் பெருக்கெடுத்த வெள்ளம்... போக்குவரத்து நெரிசலால் ஸ்தம்பித்த சென்னை!
சென்னை: சென்னையில் நேற்று மாலை பெய்த கனமழைக்கு சாலைகளில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடியதால் பல இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகனங்கள் செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. லட்சக்கணக்கான வாகனங்கள் நகர முடியாமல் தேங்கி நின்றன.
வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை நீடிப்பதால் மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் சென்னையில் நேற்று மாலை மீண்டும் பல இடங்களில் மாலை 6 மணிக்கு மேல் கனமழை பெய்தது. சுமார் 3 மணி நேரமாக பெய்த கனமழைக்கு லட்சக்கணக்கான வாகனங்கள் சாலைகளில் தேங்கி நின்றன.
நந்தனம், தி.நகர், எழும்பூர், பாரிமுனை, புரசைவாக்கம், கிண்டி, வடபழனி, போரூர், விருகம்பாக்கம், கோயம்பேடு, ஈக்காட்டுத்தாங்கல், நந்தனம், சைதாப்பேட்டை,போரூர், பூந்தமல்லி, சூளைமேடு,நுங்கம்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் மழை விடாது பெய்து வருகிறது. சென்னையை அடுத்த தாம்பரம், கூடுவாஞ்சேரி,பெருங்களத்தூர் உள்ளிட்ட இடங்களிலும் தொடர் மழை பெய்தது. கனமழையின் காரணமாக அண்ணா சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வாகனங்கள் நகர முடியாமல் ஊர்ந்து சென்றன. லட்சக்கணக்கான வாகனங்கள் நகர முடியாமல் தேங்கி நின்றதால் பொதுமக்கள் பெரும் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.
இதனால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். அதேபோல் கிண்டி - தாம்பரம் சாலையிலும் போக்குவரத்து முடக்கம் ஏற்பட்டது. கிழக்கு கடற்கரை சாலையில் கனமழை பெய்ததால் சாலைகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. சாலைகளில் இரண்டு அடிக்கு மேல் மழை நீர் தேங்கி நிற்பதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. விடாது பெய்த மழைக்கு வடபழனி, சாலிக்கிராமம் உள்ளிட்ட பெரும்பாலான இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்பட்டது. இதனால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர். சாலைகளில் ஆங்காங்கே இரு சக்கர வாகனங்கள் மற்றும் ஆட்டோக்கள் பழுதாகி நின்றதால் வாகனங்கள் செல்ல முடியாத சூழல் ஏற்பட்டது.