வயதான காலத்தில் கவனிக்க ஆளில்லாமல் விஷம் குடித்து தற்கொலை செய்த தம்பதி
ஈரோடு: ஈரோட்டில் வயதான காலத்தில் கவனிக்க ஆள் இல்லாததால் கணவன், மனைவி விஷ மாத்திரை சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டனர்.
ஈரோடு மாவட்டம் ஊஞ்சலூர் அருகே இருக்கும் தேவம்பாளையத்தைச் சேர்ந்தவர் விவசாயியான குழந்தைசாமி(72). அவருடைய மனைவி இளையம்மாள்(68). அவர்களின் மகள்கள் பார்வதி, தங்கமணி ஆகியோருக்கு திருமணமாகிவிட்டது. அதில் பார்வதியும் அவரது கணவரும் 10 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார்கள்.
தங்கமணி தனது கணவருடன் கருமாண்டம்பாளையம் அருகே இருக்கும் கருக்கன்காட்டுவலசில் வசித்து வருகிறார். குழந்தைசாமி தனது மனைவியுடன் தனியாக வசித்து வந்தார். உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த அவர்களை கவனித்துக் கொள்ள யாருமே இல்லையே என்ற கவலையில் இருந்து வந்தனர்.
இதையடுத்து அவர்கள் கடந்த 4 நாட்களுக்கு முன்பு இரவு நேரத்தில் விஷ மாத்திரைகளை சாப்பிட்டனர். மாத்திரையை சாப்பிட்ட பிறகு குழந்தைசாமியால் வேதனையை தாங்க முடியவில்லை. இதையடுத்து அவர் தூக்குப் போட்டு தற்கொலைக்கு முயன்றார். ஆனால் கயிறு அறுந்து விழுந்து அவர் இறந்தார்.
இளையம்மாள் வீட்டு திண்ணையில் இறந்து கிடந்தார். அவர்கள் இறந்து கிடந்ததை மறுநாள் காலையில் பார்த்த அக்கம்பக்கத்தினர் இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவல் கிடைத்ததும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் பற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.