மத்திய மாநில அரசுக்கு எதிராக களமிறங்கும் மக்கள் நலன் காக்கும் கூட்டியக்கம்- ஆர்பாட்டம், உண்ணாவிரதம்
சென்னை: மத்திய மாநில அரசுகளின் மக்கள் விரோத நடவடிக்கைகளைக் கண்டித்து மக்கள் நலன் காக்கும் கூட்டு இயக்கத்தின் சார்பில் ஆகஸ்ட் 13 ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல ஆந்திர, தமிழக அரசுகளைக் கண்டித்து சென்னை- திருவண்ணாலையில் உண்ணாவிரத அறப்போராட்டம் நடத்தவும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
மத்திய மாநில அரசுகளின் மக்கள் விரோத நடவடிக்கைகளைக் கண்டித்து, மக்கள் நலன் காக்கும் கூட்டு இயக்கத்தின் சார்பில், ஆகஸ்ட் 13 ம் தேதியன்று மாலை நான்கு மணி அளவில் தமிழ்நாட்டில் ஐந்து இடங்களில், மக்கள் பெருந்திரள் ஆர்ப்பாட்ட அறப்போர் நடைபெற இருக்கின்றது.

ஆர்பாட்டத்தில் பங்கேற்போர்
இந்த அறப்போரில் ஐந்து இடங்களிலும் பங்கேற்போர் பட்டியலை, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம், இந்திய கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்), இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள், மனிதநேய மக்கள் கட்சி ஆகியவற்றின் சார்பில், வைகோ, ஜி. இராமகிருஷ்ணன், இரா. முத்தரசன், தொல். திருமாவளவன், எம்.எச். ஜவாஹிருல்லா ஆகியோர் விடுத்த கூட்டு அறிக்கையில் தெரிவித்து உள்ளனர்.
வைகோ - திருமாவளவன்
சென்னை - வைகோ, ஜி.ராமகிருஷ்ணன், இரா.முத்தரசன்,
தொல். திருமாவளவன், தமிமுன் அன்சாரி.
தஞ்சை: துரை.பாலகிருஷ்ணன், கே.பாலகிருஷ்ணன், மு.வீரபாண்டியன், சிந்தனைச்செல்வன், மதுரை மைதீன்.
ஈரோடு: திருப்பூர் சு.துரைசாமி, கே.வரதராஜன், கே.சுப்பராயன், ரவிக்குமார், ஆரூன் ரஷீத்.
மதுரை: மல்லை சத்யா, டி.கே.ரங்கராஜன், தா.பாண்டியன், தலையாரி, மன்னை செல்லச்சாமி.
நெல்லை: நாசரேத் துரை, ஆர்.சௌந்தரராஜன், கோ.பழனிச்சாமி, ஆளூர் ஷாநவாஸ், ஜோசப் நொலஸ்கோ.
20 தமிழர் சுட்டுக்கொலை
இதனிடையே இருபது அப்பாவித் தமிழர்கள் ஆந்திர மாநிலத்தின் காவல்துறையினரால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்து மேல்நடவடிக்கை குறித்த ஆலோசனைக் கூட்டம் 11.08.2015 செவ்வாய்கிழமை காலை 11 மணிக்கு சென்னை, எழும்பூரில் உள்ள மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக தலைமை அலுவலகமான தாயகத்தில் நடைபெற்றது.
முதல்வரை சந்திக்க வாய்ப்பு
ஆந்திரா வனப்பகுதியில் நடைபெற்ற உண்மைகளை தமிழக முதல்வர் மாண்புமிகு ஜெயலலிதா அவர்களிடம் தெரிவிப்பதற்காக, அரசியல் கட்சிகள் தமிழ் அமைப்புகள் சார்பில் முதல்வரை நேரில் சந்திக்க நேரம் ஒதுக்கித் தருமாறு 2015 ஜூலை 15 ஆம் தேதியன்று, மறுமலர்ச்சி தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, முதல் அமைச்சருக்குக் கடிதம் அனுப்பினார். ஆனால், இன்றுவரை சந்திப்பதற்கான வாய்ப்பு வழங்கப்படவில்லை.
அனுதாபம் இல்லையே
20 தமிழர்களைப் படுகொலை செய்த ஆந்திர அரசின் கொடுஞ்செயலுக்குத் தமிழக முதல்வர் கண்டனம் தெரிவிக்கவில்லை என்பதோடு, படுகொலையானவர்களின் குடும்பத்தினருக்கு ஒரு வார்த்தைகூட அனுதாபமும் தெரிவிக்கவில்லை.
பிரேத பரிசோதனை அறிக்கை
படுகொலை குறித்த உண்மைகளை மூடி மறைப்பதற்காக, கொல்லப்பட்டவர்களின் உடல்களைப் புதைப்பதற்குப் பதில் எரிக்கும்படித் தமிழகக் காவல்துறை மிரட்டியதால், 14 பேர்களது உடல்கள் எரிக்கப்பட்டு விட்டன. பொதுமக்கள் போராடியதால் ஆறு பேர்களது உடல்கள் மட்டும் மறு பிரேத பரிசோதனை நடத்தப்பட்டது. ஆனால் இன்றுவரையிலும் பிரேத பரிசோதனை அறிக்கை நகல் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்குத் தரப்படவில்லை. தமிழர்களைப் படுகொலை செய்த ஆந்திர அரசின் குற்றத்தை மூடி மறைக்கவும் நீதியைப் புதைக்கவும் தமிழக அரசு திட்டமிட்டுச் செயல்பட்டு வருகிறது.
உண்ணாவிரதம் அறப்போர்
ஆந்திர உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வருகின்ற வழக்கில், தமிழக அரசு தன்னையும் ஒரு தரப்பாக இணைத்துக் கொள்ள வேண்டும் என்பதையும், மத்தியப் புலனாய்வுத் துறை விசாரணையைக் கோர வேண்டும் என்பதையும் வலியுறுத்தி, ஆகஸ்ட் 26 ஆம் தேதி புதன் கிழமை அன்று சென்னையிலும், செப்டம்பர் 8 ஆம் தேதியன்று திருவண்ணாமலை மாவட்டம் போளூரிலும் உண்ணாநிலை அறப்போர் நடத்துவது என்று இக் கூட்டம் தீர்மானித்துள்ளது.












Click it and Unblock the Notifications