சாலை மறியலில் சிக்கிக் கொண்ட சரத்குமார்.. காரை போக விடாமல் தடுத்தவர்கள் மீது தடியடி

கடலூர் மாவட்டம் ஆவட்டி குறுக்கு சாலையில் வியாழக்கிழமை மாலை ஆட்டோ மீது கார் ஒன்று மோதியது. இதில் 6 குழந்தைகளும் 2 ஆசிரியைகளும் காயமடைந்தனர். விபத்தையடுத்து ஆத்திரமடைந்த ஆவட்டி மற்றும் கல்லூர் கிராம மக்கள் மறியலில் ஈடுபட்டனர்.
இதே இடத்தில் தொடர் விபத்துகள் நடப்பதாகவும் அதில் பலர் உயிரிழந்திருப்பதாகவும் கூறிய பொதுமக்கள் ஆவட்டி குறுக்கு சாலையில் மேம்பாலம் கட்ட வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். இக் கோரிக்கையை முன்வைத்து ஏற்கனவே பலமுறை இந்த கிராம மக்கள் போராட்டம் நடத்தியுள்ளனர்.
இந்நிலையில், போராட்டம் நடத்திய மக்களை சமாதானம் செய்ய விருத்தாசலம் கோட்டாட்சியர் உதயகுமார், திட்டக்குடி டி.எஸ்.பி. கருணாநிதி முயன்றனர். ஆனால், பொதுமக்களோ தங்கள் கோரிக்கையில் விடாப்பிடியாக இருந்தனர்.
இந்த நிலையில் அந்த வழியாக சரத்குமார் காரில் வந்தார். போராட்டம் நடந்ததால் அவரால் தொடர்ந்து போக முடியவில்லை. இதையடுத்து காரை விட்டு இறங்கிய அவர் போராட்டம் நடத்திய மக்களிடம் சமாதானமாகப் பேசிப் பார்த்தார். ஆனால் மக்கள் அவரது பேச்சை ஏற்கவில்லை.
இதையடுத்து விருத்தாச்சலம் டிஎஸ்பி வெங்கடேஷ் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தார். அவர் வந்ததும், சரத்குமார் காரை அங்கிருந்து போவதற்கான வழிகளை ஏற்படுத்திக் கொடுத்தார். ஆனால் பொதுமக்கள் காரை மறித்து நிறுத்தி போக விடாமல் செய்ய முயன்றனர்.
இதையடுத்து போலீஸார் பொதுமக்களை தடியடி நடத்திக் கலைத்தனர். தடியடியால் பொதுமக்கள் கலைந்து ஓடினர். அந்த இடத்தில் பரபரப்பு ஏற்பட்டது. வழி கிடைத்ததைத் தொடர்ந்து சரத்குமார் கார் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றது.












Click it and Unblock the Notifications