ஜல்லிக்கட்டு நடத்த வேண்டாம்… வாகனங்கள் வரக் கூடாது… அலங்காநல்லூர் மக்கள் சாலை மறியல்
அலங்காநல்லூர் சாலை வழியாக எந்த வாகனமும் வரக் கூடாது என்று 50க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.
மதுரை: ஜல்லிக்கட்டு நடத்துவது தொடர்பான அவசரச்சட்டத்தை அடுத்து, இன்று அலங்காநல்லூரில் அரசு சார்பில் ஜல்லிக்கட்டு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதனை அலங்காநல்லூர் மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஜல்லிக்கட்டு ஏற்பாடுகளை செய்ய யாரும் அலங்காநல்லூர் வரக் கூடாது என்று கூறி அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஜல்லிக்கட்டு நடத்தப்பட வேண்டும் என்று கோரி அலங்காநல்லூரில் ஒரு வாரமாக தொடர் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இதனையடுத்து, அவசரச் சட்டத்தை தமிழக அரசு இயற்றியது. இதனை போராட்டக்காரர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. ஜல்லிக்கட்டு விவகாரத்தில் தங்களுக்கு நிரந்தர தீர்வு வேண்டுமே ஒழிய அவசரச் சட்டம் தேவையில்லை என்று உறுதியாகக் கூறிவிட்டனர்.

எனினும், அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் தமிழக அரசு ஏற்பாடு செய்து வருகிறது. இந்நிலையில், அரசு வாகனங்கள் எதுவும் அலங்காநல்லூர் வழியாக செல்லக் கூடாது என்று கூறி அப்பகுதி மக்கள் 50க்கும் மேற்பட்டவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர்.
வாடிவாசல் மற்றும் கேட்டுக்கடை ஆகிய இரண்டு பகுதிகளில் போராட்டங்கள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் சுற்றுவட்டாரத்தில் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு எந்த வாகனமும் செல்ல முடியாத நிலையில் தான் இருக்கிறது. என்றாலும், இன்று ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்ய அரசு வாகனங்கள் எதுவும் வந்துவிடக் கூடாது என்பதற்காகவே போராட்டக்காரர்கள் இன்று சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.
இதனால் அலங்காநல்லூர் வழியாக மதுரை, பாலமேடு, மேலூர் என எந்தப் பகுதிக்கும் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஜல்லிக்கட்டில் நிரந்தரத் தீர்வு வேண்டும் என்று மக்கள் தங்கள் போராட்டத்தை உறுதியாக நடத்தி வருகன்றனர்.
இதனையடுத்து, அரசு அதிகாரிகள் அலங்காநல்லூர் சென்று ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான எந்த ஏற்பாடுகளையும் செய்ய முடியாத சூழ்நிலை அரசு அதிகாரிகளுக்கு ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications