அக்-17 அதிமுகவின் 42வது பிறந்தநாள்: அதே நாளில் ஜெ. ஜாமீன் வழக்கு விசாரணை!
சென்னை: சொத்துக்குவிப்பு வழக்கில் நான்கு ஆண்டுகாலம் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள ஜெயலலிதாவின் ஜாமின் மனு வரும் அக்டோபர் 17ம் தேதி உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளது. இது அதிமுகவினரால் மறக் முடியாத நாளாகும்.
அக்டோபர் 17 அஇஅதிமுகவின் அரசியல் வரலாற்றில் மறக்கமுடியாத நாள். திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்து வெளியேறிய எம்.ஜி.ஆர் 1972ம் ஆண்டு அக்டோபர் 17ம் தேதிதான் முதன் முதலாக அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தைத் தொடங்கினார்
கட்சி தொடங்கப்பட்ட இரண்டே மாதங்களில் பல லட்சக்கணக்கானோர் இணைந்தனர். பின்னர் கட்சியின் வலிமையை சோதிப்பதற்காக 1973ம் ஆண்டு நடந்த திண்டுக்கல் இடைதேர்தலில் போட்டியிட்டு அமோகவெற்றியும் பெற்றது.
பின்னர் 1974ம் ஆண்டு நடந்த கோயம்புத்தூர் சட்டசபை இடைதேர்தலில் போட்டியிட்டு அங்கும் மாபெரும் வெற்றி பெற்றது. இந்த வெற்றிகள் அதிமுக மிகப்பெரும் கட்சியாக உருவெடுக்க ஊன்றுகோலாக இருந்தன.

மூன்று முறை முதல்வர்
ஊழல் குற்ற சாட்டுகளில் திமுக ஆட்சி கலைக்கபட்ட போது 1977ம் ஆண்டு அதிமுக முதன் முதலாக ஆட்சியை பிடித்தது .பின்னர் நடந்த 1980 மற்றும்1984ம் ஆண்டு நடந்த தேர்தல்களிலும் அதிமுக மாபெரும் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. தொடர்ந்து மூன்று முறை முதல்வரானார் எம்.ஜி.ஆர்.

ஆட்சி கலைப்பு
1987ல் எம்.ஜி.ஆரின் மறைவிற்குப் பின்னர் ஆர்.எம்.வீரப்பன் ஆதரவுடன் எம்.ஜி.ஆரின் மனைவி ஜானகி முதல்வரானார். பின்னர் சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பு பெறும் குழப்பங்களுக்கு இடையே அரங்கேறியது. இதில் ஜானகி வெற்றி பெற்றாலும் சட்டமன்றத்தில் நடைபெற்ற குழப்பங்களை காரணம் காட்டி ஆட்சியை கலைக்க உத்தரவிட்டார் அப்போதய பிரதமர் ராஜீவ் காந்தி.
ஜானகி அம்மாள் அமைச்சரவை `டிஸ்மிஸ்' செய்யப்பட்டபின், ஏறத்தாழ ஓராண்டு காலம் தமிழ்நாட்டில் குடியரசுத் தலைவர் ஆட்சி நடைபெற்றது.

1989 சட்டமன்ற தேர்தல்
1989 ஜனவரி 21ம் தேதி தமிழக சட்டசபைக்குத் தேர்தல் நடந்தது. இந்தத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைக்க ஜெயலலிதா மிகவும் முயன்றார். ஆனால் தனித்துப் போட்டியிட காங்கிரஸ் தீர்மானித்தது.

நான்கு முனைப் போட்டி
எனவே, 1989 சட்டமன்ற தேர்தலில் தி.மு.க, காங்கிரஸ், அ.தி.மு.க. (ஜெயலலிதா அணி), அ.தி.மு.க. (ஜானகி அம்மாள்) ஆகிய 4 கட்சிகள் களத்தில் இறங்கியதால் நான்கு முனைப்போட்டி நிலவியது. அ.தி.மு.க.வின் இரட்டை இலைச்சின்னம் முடக்கப்பட்டதால், ஜெயலலிதா அணி சேவல் சின்னத்திலும், ஜானகி அணி புறா சின்னத்திலும் போட்டியிட்டன.

திமுக வெற்றி
இந்தத் தேர்தலில் திமுக 151 இடங்களில் வெற்றி பெற்று 13 ஆண்டுகளுக்குப் பின்னர் தமிழகத்தில் ஆட்சியைப் பிடித்தது. காங்கிரசுக்கு 26 இடங்களும், ஜெயலலிதா அணிக்கு 27 இடங்களும் கிடைத்தன. 175 இடங்களில் போட்டியிட்ட ஜானகி அணிக்கு ஒரே ஒரு இடம் கிடைத்தது. ஜானகி அணி சார்பில் சேரன்மாதேவி தொகுதியில் போட்டியிட்ட பி.எச்.பாண்டியன் மட்டுமே வெற்றி பெற்றார்.

எம்.எல்.ஏவான ஜெயலலிதா
போடிநாயக்கனூர் தொகுதியில் ஜெயலலிதா வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து ஜானகி அணி சார்பில் போட்டியிட்ட நடிகை வெண்ணிற ஆடை நிர்மலா, 4 வது இடத்தை அடைந்தார்.

அரசியலில் அஸ்தமித்த சிவாஜி
ஆண்டிப்பட்டித் தொகுதியில் போட்டியிட்ட ஜானகி அம்மாள் படுதோல்வி அடைந்தார். ஜானகி அம்மாளுடன் இணைந்து 50 இடங்களில் போட்டியிட்ட சிவாஜி கணேசனின் தமிழக முன்னேற்ற முன்னணி அனைத்து இடங்களிலும் தோல்வியைச் சந்தித்து, அவரை அரசியலில் இருந்தே தூர வைத்தது. 31.1.1976ல் டிஸ்மிஸ் செய்யப்பட்ட கருணாநிதி, 13 ஆண்டுகளுக்குப்பின் 27.1.1989 அன்று மீண்டும் தமிழக முதல்வராகப் பதவி ஏற்றார்.

தலைவிரி கோலமாய்
முதன்முதலாக எம்.எல்.ஏவாக வெற்றிபெற்றதோடு மட்டுமல்லாது 27 எம்.எல்.ஏக்கள் பலத்துடன் சட்டசபைக்குள் நுழைந்த ஜெயலலிதா, பட்ஜெட் கூட்டத்தொடரின் போது நடைபெற்ற கலாட்டாவில் தலைவிரி கோலமாய் வெளியேறினார். இனி முதல்வராகத்தான் சட்டமன்றத்திற்குள் நுழைவேன் என்று சபதமும் வைத்தார்.

மீண்டும் இணைந்த அதிமுக
அதிமுகவின் இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்ட பின்னர் இனி அவ்வளவுதான் அதிமுகவிற்கு அஸ்தமனம்தான் என்று எதிர்கட்சிகள் கூறிய நிலையில் மீண்டும் ஒன்றிணைந்தது. அதிமுகவின் பொதுச்செயலாளராக 1989ம் ஆண்டு தேர்வு செய்யப்பட்டார் ஜெ.ஜெயலலிதா.

வரலாறு காணாத வெற்றி
சட்டம் ஒழுங்கு பிரச்சினையால் இரண்டே ஆண்டுகளில் திமுக ஆட்சி கலைக்கப்படவே 1991ம் நடந்த 10வது சட்டமன்ற தேர்தலில் 168 இடங்களில் போட்டியிட்டு 164 இடங்களில் வெற்றி பெற்று வரலாறு காணாத வெற்றியை பதிவு செய்தது.

தனிப் பெரும்பான்மையுடன்
பின்னர் 2001ம் ஆண்டு நடந்த 12 ஆவது சட்டமன்ற தேர்தலில் 132 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. கடைசியாக 2011ல் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் 150 இடங்களில் வெற்றி பெற்று தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தது

நாடாளுமன்றத் தேர்தலில்
இதுநாள் வரை கூட்டணி அமைத்தே போட்டியிட்ட அதிமுக சமீபத்தில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக 37 இடங்களை கைப்பற்றியது. ஆனாலும் அந்த மகிழ்ச்சியை கொண்டாட முடியாத நிலையில் சொத்துக் குவிப்பு வழக்கு நெருக்கடி கொடுத்தது.

7வது முறையாக பொதுச்செயலாளர்
கடந்த ஆகஸ்ட் 29ம் தேதி அதிமுகவின் பொதுச்செயலாளராக 7து முறையாக தேர்வானார் ஜெயலலிதா. இந்த ஆண்டுடன் அவர் பொதுச்செயலாளராக பதவியேற்று 25 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.

பதவியிழப்பு
18 ஆண்டுகளாக நடைபெற்ற ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் கர்நாடக சிறப்பு நீதிமன்றம் கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி தீர்ப்பளித்தது. அதில் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய நால்வரும் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டு உடனடியாக தண்டனையும் அறிவிக்கப்பட்டது. மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின்படி, உடனடியாகச் சட்டமன்ற உறுப்பினர் பதவியை ஜெயலலிதா இழந்தார். மேலும் 10 ஆண்டுகளுக்குப் போட்டியிட முடியாது என்ற அடிப்படையில் முதல்வர் பதவியையும் இழந்தார். மாநில முதல்வர் பதவி இழந்ததனால் அவரது அமைச்சரவையும் பதவி இழந்தது.

நீடிக்கும் ஆட்சி
ஆனால் அதிமுகவிற்கு தனிப்பெரும்பான்மை இருப்பதனால் ஆட்சி கவிழவில்லை. அதிமுகவைச் சேர்ந்த ஓ.பன்னீர் செல்வம் தலைமையில் செப்டம்பர் 29ம் தேதி மீண்டும் அமைச்சரவை பதவியேற்றது.

அதிமுக உதயமாகி 42 ஆண்டுகள்
எம் ஜி ஆர், 1972ம் ஆண்டு அக்டோபர் 17ம் தேதி அதிமுகவை ஆரம்பித்தார். கட்சி ஆரம்பிக்கப்பட்டு 42 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இதில் 24 ஆண்டுகள், அதிமுக தமிழகத்தில் ஆளும் கட்சி அந்தஸ்த்தில் இருந்துள்ளது.

அக்டோபர் 17, 2014
செப்டம்பர் 27 தீர்ப்புக்குப் பின்னர் ஜெயலலிதா சிறை சென்றதை அடுத்து அதிமுகவில் மிகப்பெரிய தேக்கநிலை ஏற்பட்டுள்ளது. இது ஆட்சியிலும் எதிரொலிக்கிறது. கர்நாடக உயர் நீதிமன்றத்தில் கடந்த 7அம் தேதி ஜாமின் மறுக்கப்பட்டது. இதனையடுத்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. இது அக்டோபர் 17ம் தேதி விசாரணைக்கு வர உள்ளது.
அன்றைய தினம்தான் அதிமுக உதயமான தினம். ஆண்டுதோறும் இந்தநாள் அதிமுகவினர் கொண்டாட்டம் களைகட்டும். அன்றைய தினம் உச் சநீதிமன்றம் ஜாமீன் வழங்கி ஜெயலலிதாவிற்கும் அதிமுகவினருக்கும் உற்சாகத்தைக் கொடுக்குமா? அல்லது ஜெயலலிதாவை உள்ளேயே வைத்திருந்து அதிமுகவினருக்கு அதிர்ச்சியைக் கொடுக்குமா... பொறுத்திருந்து பார்க்கலாம்.












Click it and Unblock the Notifications