தினகரன் பேசினாலும் களத்தில் கலவரம் தான்.. “இன்னும் ஜெல் ஆகல”.. அதிமுக மேடையில் ஏற மறுத்த அமமுகவினர்!
சென்னை: அதிமுக கூட்டணியில் அமமுக இணைந்துள்ள நிலையில், களத்தில் இரு கட்சியினரும் இன்னும் 'ஜெல்’ ஆகாத சூழலே நிலவுவதாக கூறப்படுகிறது. அதிமுக கட்சி மேடையில் அமமுகவினர் ஏற மறுத்தது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
அதிமுக, பாஜக கூட்டணியில் டிடிவி தினகரன் தலைமையிலான அமமுக, அன்புமணி தலைமையிலான பாமக, ஜெகன் மூர்த்தி தலைமையிலான புரட்சி பாரதம், ஜாண்பாண்டியன் தலைமையிலான தமிழக மக்கள் முன்னேற்றக்கழகம், புதிய நீதிக்கட்சி உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றுள்ளன.

தினகரன் + எடப்பாடி
எடப்பாடி பழனிசாமியை தீவிரமாக விமர்சித்து வந்த அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் திடீரென யூ டர்ன் அடித்து அதிமுக - பாஜக கூட்டணியில் இணைந்து, 'அண்ணன் எடப்பாடி பழனிசாமி” எனப் பேசி வருகிறார். தேர்தலுக்காகவே கூட்டணி என்றாலும், 8 வருடங்களாக எடப்பாடி பழனிசாமியை துரோகி என விமர்சித்துவிட்டு, எப்படி கைகோர்த்துச் செயல்படுவது என அமமுக நிர்வாகிகளே கையைப் பிசைகின்றனராம்.
பங்காளிகள்
என்.டி.ஏ கூட்டணிக்குள் அமமுக வந்துவிட்ட போதிலும், அதிமுகவுக்காக ஓட்டு கேட்க அமமுகவினர் தயங்குவதால் அதிமுகவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். பகையை மறந்து பங்காளி ஆகிவிட்டோம் என டிடிவி தினகரன் கூறியும், அமமுகவினர் எங்கள் நிகழ்ச்சிகளில் பங்கேற்பதில்லை என அதிமுகவினர் புகார் வாசிக்கின்றனர்.
மேடையில் ஏற மறுத்த அமமுகவினர்
எடப்பாடி பழனிசாமி, தஞ்சாவூர் சென்றபோது, அமமுக நிர்வாகிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில் நிகழ்ச்சியில் அவர்கள் பங்கேற்கவில்லை. அதிமுக மேடையில் ஏற தினகரன் அனுமதி தரவில்லை என அமமுகவினர் தெரிவிப்பதாக அதிமுகவினர் கூறுகின்றனர்.
அதிமுக கூட்டணியில் அமமுக தென் மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் முக்கிய இடங்களை கேட்டு வருகிறது. அமமுக சார்பில் போட்டியிடுவதற்காக சிலர் தயார் நிலையில் உள்ளனர். தொகுதியில் பணியாற்றி, சீட்டுக்காக காத்துக் கொண்டிருக்கின்றனர். ஒருவேளை இந்த தொகுதிகள் கிடைக்காவிட்டால் கூட, அங்குள்ள டிடிவி தினகரன் ஆதரவாளர்கள் அதிமுகவுக்காக பணியாற்றுவார்களா என்பது சந்தேகமே எனக் கூறப்படுகிறது.
கூட்டணிக்குள் உள்குத்து
அமமுக வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதியில் மட்டும் தேர்தல் பணிகளில் ஈடுபடுவோம். கூட்டணிக்கு எதிராக உள்குத்து நடக்குமென்றும், எங்களுக்குத்தான் நிறைய ஆதரவாளர்கள் இருக்கிறார்கள் என்ற ரீதியில் அமமுக நிர்வாகிகள் சிலர் சமூக வலைதளங்களில் பேசி வருகின்றனர். இது கூட்டணிக்குள் பெரும் குழப்பம் ஏற்படும் சூழலை உருவாக்கி உள்ளது.












Click it and Unblock the Notifications