லட்டு, மைசூர் பாகு வினியோகம்.. போயஸ்கார்டனில் அதிமுக தொண்டர்கள் கொண்டாட்டம்
சென்னை: ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் ஜெயலலிதா முன்னிலை பெற்றத் தொடங்கியதுமே அதிமுகவினர் இனிப்புகள் கொடுத்தும், பட்டாசுகள் வெடித்தும் கொண்டாட்டங்களை வெளிப்படுத்தினர். ஜெயலலிதா அபார வெற்றி பெற்றதும், கொண்டாட்டங்கள் உச்ச ஸ்தாபியை எட்டின.
ஆர்.கே.நகர் இடைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெறுவதையொட்டி, காலை முதலே ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லத்தை சுற்றிலும் அதிமுக தொண்டர்கள் குவிந்தனர். தேர்தல் முடிவுகளில் தொடக்கம் முதலே ஜெயலலிதா முன்னிலை வகித்தார்.
3வது சுற்று முடிந்த பிறகு, இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் அதிமுக நடுவே மிகப்பெரிய வாக்குவித்தியாசம் உருவானது. இதையடுத்து போயஸ்கார்டனில் குவிந்த ஆண், பெண் தொண்டர்கள் குத்தாட்டம் ஆடி மகிழ்ச்சி வெளிப்படுத்தினர்.
லட்டு, மைசூர் பாகு போன்ற ஸ்வீட்டுகளை, நிர்வாகிகள் கொடுக்க, தொண்டர்கள் பெற்றுக்கொண்டனர். ஆயிரம் வாலா சரவெடிகள் பலவும் அவ்வப்போது கொழுத்திவிடப்பட்டன. புரட்சித் தலைவி வாழ்க, அம்மா வாழ்க, காவிரியை மீட்ட தாய் வாழ்க, என தொண்டர்கள் கோஷங்களை எழுப்பியபடியே இருந்தனர்.
கடைசி சுற்றில், ஜெயலலிதா ஒன்றரை லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதும், அவர்கள் கொண்டாட்டங்கள் உச்சகட்டத்துக்கு சென்றன. மாநிலங்கள் முழுவதுமே அதிமுகவினர் ஆரவாரம் காதை பிளந்தது.