ஜெ. பிறந்த நாள்: மண்சோறு சாப்பிட்ட அதிமுக தொண்டர்கள்!
சென்னை: தமிழகம் முழுவதும் அதிமுகவினர் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாளை பல்வேறு வகைகளில் கொண்டாடி வருகின்றனர். ஜெயலலிதாவின் பிறந்த நாளையொட்டி அதிமுகவினர் மண்சோறு சாப்பிட்டும் தங்களது "விசுவாசத்தை" காட்டி வருகின்றனர்.
தமிழக முதல்வரின் 66வது பிறந்தநாளை முன்னிட்டு தமிழகம் முழுக்க கட்சியினர் பல்வேறு ஏற்பாடுகள் செய்து வருகின்றனர். இந்நிலையில் அதிமுக மாநில மகளிரணி துணை செயலாளரும், திருப்பூர் மேயருமான மேயர் விசாலாட்சி தலைமையில் திருப்பூர் மகளிரணி நிர்வாகிகள் 66 பேர் கடந்த பிப்ரவரி 10ந் தேதி பழனிக்கு பாதயாத்திரை துவங்கினர்.

பாதயாத்திரை பயணத்தின் போது முன்னும், பின்னும் பாதுகாப்பு வாகனங்கள் அணிவகுக்க மேளதாளம் முழங்க பாதயாத்திரை நேற்று பழனி சென்றடைந்தது. பழனி சென்ற அதிமுக மகளிரணி பாதயாத்திரை குழுவினரை பழனி எம்எல்ஏ., வேணுகோபாலு மற்றும் கட்சியினர் சால்வை வழங்கி வரவேற்றனர்.
பாதயாத்திரை குழுவினர் இன்று முதல்வரின் மகம் நட்சத்திரம் வந்ததால் காலை 7 மணிக்கு மலைக்கோயிலுக்கு பால்குடங்களுடன் சென்று மூலவர் தண்டாயுதபாணிக்கு சிறப்பு பூஜைகள், அர்ச்சனைகள்,அபிஷேகங்கள் நடத்தினர். மேயர் விசாலாட்சிக்கு திருக்கோயில் சார்பில் பிரசாதங்கள் வழங்கப்பட்டது.
இதேபோல் அதிமுக பெண் தொண்டர்கள் தரையில் சாதத்தைக் கொட்டி "மண்சோறு" சாப்பிட்டு கட்சி "விசுவாசத்தை" வெளிப்படுத்தினர்.












Click it and Unblock the Notifications