தலைமையில் இருந்து பணம் வந்துருக்கு.. போலீசிடம் சிக்காம கொடுக்கணும்! ஆலங்குளம் அதிமுக வேட்பாளர் பேசும் வீடியோ
தென்காசி: ஆலங்குளம் தொகுதி அதிமுக வேட்பாளர் கேஆர்பி பிரபாகரன் தனது ஆதரவாளர்கள் மத்தியில் தலைமையிடம் இருந்து பணம் வந்துள்ளதாக பேசிய காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "ஒவ்வொரு ஓட்டும் முக்கியம்.. அதனால நமக்கு யாருலாம் ஓட்டு போடுவாங்க என்று தெரியுமோ அவங்களுக்கு எல்லாத்துக்கும் பணத்த கொடுங்க.. போலீஸ் பறித்துவிட்டார்கள் என்று எல்லாம் சொல்லக்கூடாது, சரியா பணத்த கொடுத்துவிடுங்கள்" என அவர் பேசும் வீடியோ பரவி வருகிறது.
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பாக முன்னாள் எம்.பி கேஆர்பி பிரபாகரன் போட்டியிடுகிறார். திமுக சார்பாக கடந்த முறை அதிமுகவில் இருந்து போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்த மனோஜ் பாண்டியன் களமிறங்கியுள்ளார். இதனால் திமுக, அதிமுக இரு தரப்பிலும் தீவிர பிரசாரம் செய்து வருகிறார்கள். வீடு வீடாக சென்று ஓட்டு சேகரித்து வரும் நிலையில் பணப்பட்டுவாடா நடக்காமல் இருக்க தேர்தல் ஆணையமும் கண்காணித்து வருகிறது.

எல்லாத்துக்கும் பணம் கொடுக்கனும்
இந்த நிலையில் தான் அதிமுக வேட்பாளர் கேஆர்பி பிரபாகரன் தனது ஆதரவாளர்கள் மத்தியில் தலைமையிடம் இருந்து பணம் வந்துள்ளதாக பேசிய காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேஆர்பி பிரபாகரன் அந்த வீடியோவில் பேசியதாவது:- 5 பேரை போட்டு இருக்கிறோம். பாஜக கட்சியினரையும் கூப்பிட்டு போகனும்.. அவுங்க பாஜகவினர் வீட்டையும் காட்டுவாங்க..
ஒன்றிய செயலாளர் 5 பேரை தந்து இருக்கிறார். ஓட்டுக்கு பணம் கொடுக்கும் போது 5 பேர்.. பாஜகவில் இருந்து ஒரு ஆள் வச்சிதான் போகனும்.. அவனுக்கு கொடுக்க வேண்டாம்.. இவனுக்கு கொடுக்க வேண்டாம்னு நினைக்க கூடாது. கட்சிக்கு ஓட்டுபோடுவான் என்று தெரிந்தால் கொடுத்தே ஆகணும்.. இந்த 5 நாளிலும் பரந்த மனப்பான்மையுடன் இருக்கணும்.
கரெக்டா பணத்தை கொடுக்கனும்
உறுதியாக நமக்கு போட மாட்டாங்க என்றால் கொடுக்க வேண்டாம். திமுக காரர்களுக்கு கொடுக்க வேண்டாம்.. அவுங்களுக்கு அவுங்க கொடுப்பாங்க.. வாக்குகளை வாங்கனும்னா கரெக்டா கொடுக்கனும். அப்போதுதான் தக்க வைக்க முடியும். உதயசூரியன் அப்படித்தான் செய்வார்கள். நம்ம ஓட்டு விட்றக்கூடாது என்று வீடு பார்த்து கொடுப்பாங்க..
தலைமையில் இருந்து வரும் பணத்தை கையில் எடுக்காதீங்க.. அது அசிங்கம்.. நாமளே நம்ம கட்சியை அழிக்கிற மாதிரியும் தோல்வியை கொடுக்கிற மாதிரியும் நடந்துக்க கூடாது. பொதுச்செயலாளர் தெளிவாக சொல்லிருக்காரு.. 50 வாக்குகளில் கூட வெற்றி வாய்ப்பு நிர்ணயிக்கப்பட்டு இருக்கு.. அதனால், யோசிங்க.. ஒரு ஓட்டுதானே என்று நினைக்கிறார்கள்.
ஆளும் கட்சியாக வந்தால் எத்தனையோ நல்லது செய்யலாம். ஞாயிற்றுக்கிழமை காலையில் கொடுக்குற மாதிரி ஐடியா பண்ணி வச்சிருக்கோம். அதனால், எல்லாரும் ரெடியா இருங்க. போலீஸ் வந்துட்டு.. எங்கிட்ட பிடிங்கிட்டு போய்ட்டுன்னு சொல்லக்கூடாது. காங்கிரஸ் ஓட்டுக்கும் கொடுங்க" என்று பேசும் காட்சிகள் வெளியாகியுள்ளன.
தென்காசியில் மோதுவது யார் யார்?
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பாக முன்னாள் எம்.பி கேஆர்பி பிரபாகரன் போட்டியிடுகிறார். திமுக சார்பாக மனோஜ் பாண்டியன் போட்டியிடுகிறார். கடந்த முறை அதிமுக சார்பில் போட்டியிட்டு வென்ற மனோஜ் பாண்டியன், எடப்பாடி பழனிசாமி மீதான அதிருப்தியால் ஓ பன்னீர் செல்வம் அணியில் செயல்பட்டு வந்தார்.
பின்னர் ஓ பன்னீர் செல்வம் அணியில் இருந்து விலகி, திமுகவில் இணைந்தார். திமுகவில் இணைந்த கையோடு அவருக்கு அதே தொகுதியில் மீண்டும் போட்டியிட வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. தனிப்பட்ட செல்வாக்கு மற்றும் கட்சி செல்வாக்குடன் ஆலங்குளம் தொகுதியில் களமிறங்கும் மனோஜ் பாண்டியனை எப்படியாவது வீழ்த்த வேண்டும் என்று அதிமுகவும் வியூகம் வகுத்து வருகிறது.
இதேபோல் விஜய்யின் தவெக சார்பில் விபின் சக்கரவர்த்தியும், சீமானின் நாம் தமிழர் கட்சி சார்பில் பால்ராஜும் போட்டியிடுகின்றனர். இங்கு நாடார் ஓட்டுக்கள் அதிகம் இருக்கும் நிலையில் ராக்கெட் ராஜா மற்றும் ஹரி நாடார் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனர். ஆனால் அவர்கள் இருவரது வேட்புமனுவும் நிராகரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications