அதிமுக வேட்பாளர் பட்டியல் இன்னமும் மாறலாம்.. மாற்று வேட்பாளர்கள் மனுத்தாக்கலால் பரபரப்பு
சென்னை: முன்னாள் அமைச்சர்கள் பொன்னையன், பண்ருட்டி ராமச்சந்திரன் போன்றோர் போட்டியிடும் தொகுதிகளில் அதிமுக சார்பில் மாற்று வேட்பாளர்கள் களமிறக்கப்பட்டுள்ளதால் இவர்கள் மாற்றப்பட இன்னமும் வாய்ப்பு உள்ளதாக கருதப்படுகிறது.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நேற்று வேட்புமனு தாக்கல் முடிவடைந்தது. வேட்புமனு வாபஸ் வாங்க மே 2ம் தேதி, கடைசி நாளாகும்.
அதிமுக சார்பில் சைதாப்பேட்டையில் போட்டியிடும் பொன்னையனுக்கு மாற்றாக அத்தொகுதியின் எம்.எல்.ஏ. செந்தமிழன், ஆலந்துாரில் நிற்கும் பண்ருட்டி ராமச்சந்திரனுக்கு மாற்றாக, எம்.எல்.ஏ வெங்கட்ராமன் ஆகியோர் மனு தாக்கல் செய்துள்ளனர்.

சைதை துரைசாமி
தி.நகர் தொகுதி வேட்பாளர் சத்யாவுக்கு மாற்று வேட்பாளராக மேயர் சைதை துரைசாமி மனுத்தாக்கல் செய்துள்ளார். சென்னையில் மற்ற தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு மாற்றாக அந்த தொகுதி செயலர் அல்லது பகுதி செயலர்கள் மனு தாக்கல் செய்து உள்ளனர். மாவட்டங்களில் நகர செயலர், ஒன்றிய செயலர்களை மாற்று வேட்பாளர்களாக களம் இறக்கி உள்ளனர்.

பீதியில் வேட்பாளர்கள்
பல தொகுதிகளில் மாற்று வேட்பாளர்களாக கட்சி நிர்வாகிகள் மனு தாக்கல் செய்துள்ளனர். எனவே இன்னமும் வேட்பாளர் பெயர் மாற்றம் இருக்குமோ என்ற பீதியில், வேட்பாளர்கள் உள்ளனர்.

மாற்று வேட்பாளர்கள்
வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டவர்கள் தங்களது மாற்று வேட்பாளர்களாக தங்களின் உறவினர்களை நிறுத்தக் கூடாது. கட்சி நிர்வாகிகளை தான் நிறுத்த வேண்டும் என அதிமுக தலைமை உத்தரவிட்டது. அதேபோல வேட்பாளர்கள் மாற்று வேட்பாளர்களை மனு தாக்கல் செய்துள்ளனர்.

தள்ளுபடியாகுமா
தங்கள் மனு தள்ளுபடி செய்யப்பட்டாலோ கட்சி தலைமை கடைசி நேரத்தில் தங்களை வாபஸ் வாங்க சொன்னாலோ தங்களின் வாய்ப்பு பறிபோய் விடுமே என்ற கவலையில் அதிமுக வேட்பாளர்கள் உள்ளனர்.

மனு ஏற்பு
இந்நிலையில், வேட்பு மனுக்கள், இன்று பரிசீலனை செய்யப்படுகின்றன. பரிசீலனையின்போது, அதிகாரப்பூர்வ வேட்பாளர் மனு ஏற்றுக் கொள்ளப்பட்டதும், மாற்று வேட்பாளர் மனு தள்ளுபடியாகி விடும். அதிகாரப்பூர்வ வேட்பாளர் மனு நிராகரிக்கப்பட்டால், மாற்று வேட்பாளர் மனு ஏற்றுக் கொள்ளப்படும்.












Click it and Unblock the Notifications