மீ பாவம் ரேஞ்சுக்குப் போயிருச்சே.. 46-வது ஆண்டில் தலைமையை தொலைத்து பரிதவிக்கும் அதிமுக! #admk46
அதிமுக தொடங்கி 45 ஆண்டுகள் நிறவடையும் நிலையில் வலிமையான தலைமையோ வருங்கால தலைமுறையோ இல்லாத பரிதாபத்தில்தான் இருக்கிறது.
சென்னை: எம்ஜிஆர் அதிமுகவை தொடங்கி இன்றுடன் 45 ஆண்டுகள் நிறவடையும் நிலையில் அக்கட்சி தலைமையை தொலைத்து தத்தளிக்கும் பரிதாப நிலையில் இருக்கிறது.
திமுகவில் இருந்து நீக்கப்பட்ட எம்ஜிஆர் 1972-ம் ஆண்டு அக்டோபர் 17-ல்தான் அதிமுகவை தொடங்கினார். எம்ஜிஆர் எனும் மாபெரும் ஆளுமையின் தலைமையின் கீழ் அதிமுக இருந்த போதும் நெடுஞ்செழியன், ஆர்.எம்.வீரப்பன், எஸ்.டி. சோமசுந்தரம், ஹண்டே என ஏகப்பட்ட 2-ம் கட்ட தலைவர்கள் அதிமுகவில் இருந்தனர்.
எம்ஜிஆருக்கு சமமானவர்களாக ஒரு கட்டத்தில் எம்ஜிஆரை கேள்வி கேட்கக் கூடியவர்களாகவும் இந்த 2-ம் கட்ட தலைவர்கள் வலிமையானவர்களாக இருந்தனர். எம்ஜிஆர் தலைமையிலான அதிமுகவில் ஒருவித ஜனநாயகத் தன்மை இருந்தது என்பதற்கு அவரது காலத்தில் எழுந்த கலகக் குரல்களே சாட்சியமாகவும் இருக்கின்றன.

எம்ஜிஆருக்கும் எதிர்ப்பு
ஜெயலலிதாவை அதிமுகவுக்குள் எம்ஜிஆர் கொண்டுவந்த போது அதை எதிர்த்து ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தின் மாபெரும் சக்தியாக இருந்த எஸ்.டி.சோமசுந்தரம் தனிக்கட்சியே தொடங்கி போர்க்கொடி தூக்கினார். பின்னர் அது போணியாகாமல் போய் எம்ஜிஆரிடமே அடைக்கலமானார். அதேபோல் ஜெயலலிதாவை ஏற்க மறுத்த ஆர்.எம்.வீரப்பன் உள்ளிட்ட மூத்த அமைச்சர்கள் பலரை ஒரே நேரத்தில் அதிரடியாக நீக்கவும் செய்தார் எம்ஜிஆர். அதிமுகவில் ஜெயலலிதா கோலோச்ச தொடங்குவதை எம்ஜிஆர் கண்முன்னே பகிரங்கமாக எதிர்த்தவர்கள் ஏராளம். எம்ஜிஆரே விரக்தி அடையும் அளவுக்கு அப்போது நிலைமை இருந்ததும் நிதர்சனம்.

உடைந்தது அதிமுக
எம்ஜிஆர் மறைவுக்குப் பின்னர் 2-ம் கட்ட தலைவர்கள் மட்டுமே ஒன்று கூடி அதிமுகவை முன்னெடுத்துச் சென்றிருக்க சாத்தியம் இருந்தது. ஆனால் எம்ஜிஆர் மீதான தனிப்பட்ட விசுவாசத்தால் அவரது மனைவி ஜானகி அம்மையாரை 2-ம் கட்ட தலைவர்கள் முன்னிறுத்தினர். அதேநேரத்தில் ஜெயலலிதாவை அதிமுகவின் 3-ம் கட்ட தலைவர்களாக இருந்த திருநாவுக்கரசர், கே.கே.எஸ்.எஸ்.ஆர் உள்ளிட்டோர் கொண்டாடினர். இதனால அதிமுக இரண்டாக பிளவுபட்டது. எம்ஜிஆர் கட்டிக் காத்த அதிமுகவும் அதன் சின்னமும் முதல் முறையாக முடங்கிப் போனது. ஆனால் ஜானகி அம்மையாரை மக்கள் நிராகரித்தனர். எம்ஜிஆர் வென்ற ஆண்டிபட்டி தொகுதியிலேயே ஜானகி அம்மையார் தோற்கடிக்கப்பட்டார்.

கைப்பொம்மையான ஜெ.
இதையடுத்து ஜானகி அம்மாளே அரசியலை விட்டு ஒதுங்க அதிமுகவும் இரட்டை இலை சின்னமும் ஜெயலலிதா வசமானது. ஜெயலலிதாவின் கைகளுக்குப் போனது முதல் அதிமுகவில் ஜனநாயகம் செத்துப் போனது. சசிகலா வகையறாக்களின் கைப்பொம்மையாக ஜெயலலிதா சிக்கிக் கொண்டார். ஒரு கட்சிக்கான அத்தனை அம்சங்களையும் அதிமுகவில் ஒழித்துக் கட்டியது சசிகலா கும்பல். இத்தனைக்கும் மூளையாக இருந்தவர் சசிகலாவின் கணவர் நடராஜன். இதன் விளைவாக அதிமுகவில் அடுத்த கட்ட தலைவர்கள் எவருமே இல்லாத நிலை உருவானது. அனைவரையுமே ஒழித்துக் கட்டியது சசிகலா கும்பல்.

அடிவருடிகள் கூடாரம்
அத்துடன் அதிமுகவை ஜெயலலிதாவின் பெயரால் தங்களது குடும்ப சொத்தாக கபளீகரம் செய்து கொண்டது. சசிகலா குடும்பத்தை தாஜா செய்தால் சசிகலா குடும்பத்தின் கொள்ளைகளுக்கு உடந்தையாக இருந்தால் சசிகலா கும்பலுக்கு கப்பம் கட்டினால் அதிமுகவில் பதவிகள் கிடைக்கும் என்கிற அராஜகத்தனம் அதிமுகவில் அரங்கேறியது.

யார் பெரியவர் போட்டி
இதனால்தான் ஜெயலலிதா சிறைக்கும் போக நேரிட்டது. சசிகலா கும்பலின் ஆதிக்கத்துக்கு போட்டியாக ஜெயலலிதாவின் அனுதாபிகள் என்கிற கும்பலும் தலைகாட்டியது. சசிகலா கும்பலை காலி செய்வதில் ஜெயலலிதா அனுதாபிகள் ஒருசில முறை வெற்றி பெற்றாலும் திட்டம் போட்டு கொள்ளையடிக்கும் கொள்கை கொண்ட சசிகலா கும்பல் மீண்டும் ஜெயலலிதாவின் அதிமுகவில் கோலோச்சியது.

எம்.எல்.ஏக்களுக்கு கதி
இதன் உச்சமாகத்தான் ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் பகிரங்கமாக சசிகலா கும்பல் அதிமுகவை ஆட்டைய போட அத்தனை தில்லுமுல்லு வேலைகளையும் செய்தது. இதனாலேயே மக்கள் சசிகலா கும்பல் மீது சொல்ல முடியாத பெருங்கோபத்தை காட்டினர். சசிகலாவுக்குப் பின்னால் போன எம்.எல்.ஏக்கள் சொந்த ஊருக்குள் தலைகாட்ட முடியாத அவமானகரமான சூழல் ஏற்பட்டது.

அதிமுக இருக்குமா?
ஜெயலலிதா என்னதான் அதிமுகவை கட்டிக்காப்பாற்றினாலும் அங்கே எம்ஜிஆர் விசுவாசிகள், அதிமுகவை எம்ஜிஆர் தொடங்கிய போது உடன் இருந்து உழைத்தவர்கள் இல்லாமல் சசிகலா கும்பலின் அடிவருடிகளே நிறைந்து இருந்தனர். தன்வினை தன்ன்னைச் சுடும் என்பதைப் போல இன்று சசிகலாவின் அடிவருடிகளே அவருக்கு எதிராக போர்க்கொடி தூக்கி அதிமுகவை கைப்பற்றி உள்ளனர். ஆனால் காலத்தின் கோலம் எம்ஜிஆர் உருவாக்கிய அதிமுக, எடுப்பார் கைப்பிள்ளையாக மாறிக் கிடக்கிறது. இன்றைய அதிமுகவில் வலிமையான தலைமையும் இல்லை.. வருங்கால தலைமுறையும் இல்லை.. இன்றைய நிலைக்கு ஒரு சின்ன கம்பெனியாகி சுருங்கிப் போய்விட்டது என்பதுதான் யதார்த்தம். அதிமுக தொடங்கப்பட்டு 45 ஆண்டுகள் ஆன நிலையில் இனி வரும் தேர்தல்களில் அதிமுக என்கிற கட்சி இருக்குமா என்கிற யதார்த்தம் நிலவுவது பெரும் பரிதாபத்துக்குரியதுதான்.












Click it and Unblock the Notifications