ஜெ.67: கேக்… பட்டாசு… பலகாரம்… பிரியாணி.. களைகட்டிய பிறந்தநாள்!
சென்னை: அதிமுக தலைமை அலுவலகம் இன்று காலைமுதலே விழாக்கோலம் பூண்டிருந்தது. ஜெயலலிதாவின் 67வது பிறந்தநாளை கேக் வெட்டியும், இனிப்புகள் வழங்கியும் பட்டாசுகள் வெடித்தும் உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்தனர் அதிமுகவினர்.
ஜெயலலிதாவின் பிறந்தநாளை தமிழகம் முழுவதும் உள்ள அதிமுகவினர் கொண்டாடிய அதே நேரத்தில் அதிமுக தலைமைக்கழகத்தில் 67 கிலோ கேக் வெட்டி உற்சாகமாக கொண்டாடினர் அமைச்சர்கள்.
இலை சேலை கட்டி
பிறந்தநாளை முன்னிட்டு அதிமுக மகளிரணியினர் பச்சை வண்ணத்தில் தங்கநிற இலைகள் வரையப்பட்ட புடவை அணிந்து வந்து அசத்தினர்.
எல்லோரும் முன்னாடி வாங்க
கேக் இல்லாத பிறந்தநாளா? அம்மா பிறந்தநாளுக்கு கேக் வெட்ட வாங்கப்பா என்று எல்லோரையும் அழைத்தார் நத்தம் விஸ்வநாதன்.
முதல்வரே முன்னாடி வாங்க
நடக்கும் விசயத்தை கவனித்துக்கொண்டு பின்னாடி இருந்த முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தை முன்னாடி வருமாறு வற்புறுத்த... அவரோ இருங்க வர்றேன் என்று கூறிவிட்டு வந்தார்.
அம்மா மலர்
பிறந்தநாள் மலரை முதல்வர் முன்னிலையில் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் வெளியிட்டார்.
கேக் ஊட்டிய வளர்மதி
தொடர்ந்து 67 கிலோ பிரம்மாண்ட கேக்கினை வெட்டிய அமைச்சர் வளர்மதி அதை எடுத்து அமைச்சர் கோகுல இந்திராவிற்கு ஊட்டி விட அதை ஏக்கத்தோடு பார்த்தார் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன்.
அடடே கேக்
அமைச்சர்கள் கேக் வெட்டி ஊட்டி விட்ட பின்னர் அதற்காகவே காத்திருந்த மகளிர் அணி தொண்டர்கள் ஆள் ஆளுக்கு கிலோ கணக்கில் கேக்குகளை எடுத்துக்கொண்டனர்.
எனக்கு கிடைச்சிருச்சே
ஏய் சுப்பக்கா நான் எடுத்துக்கிட்டேன்... நீ எத்தனை கிலோ எடுத்தே என்று கூறிக்கொண்டே நடையைக் கட்டினார் ஒரு பெண்மணி.
பிரியாணி வேறயா
கேக் கொடுத்த வைபவம் முடிந்த பின்னர் ஒருபக்கம் பிரியாணி வழங்கும் வைபமும் நடைபெற்றது. அதையும் ஒரு கை பார்த்தனர் மகளிர் அணியினர்.
போடு ஒரு ஆட்டம்
அது மட்டுமல்லாது போடு ஓரு ஆட்டம் என்று கூறி செம குத்து போட்டனர் மகளிர் அணியினர்.
அம்மா அம்மாதான்
அம்மா நீடுழி வாழணும் அதற்குத்தான் இந்த விழா என்று கூறிய அதிமுகவினர் அதே உற்சாகத்துடன் கலைந்து சென்றனர்.
அமைதி பன்னீர் செல்வம்
நடந்த அனைத்து நிகழ்வுகளையும் வழக்கம்போல அமைதியாக பார்த்துக்கொண்டு நின்றுகொண்டிருந்தார் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்.