அம்மாவுக்கு இயக்கம்தான் வாழ்க்கை, எனக்கோ அம்மாதான் வாழ்க்கை.. கண்ணீருடன் முதல் உரையாற்றிய சசிகலா
சென்னை: அதிமுக பொதுச்செயலாளராக மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் தோழி, சசிகலா இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். போயஸ் இல்லத்தில் இருந்து மதியம் 12.10 மணியளவில் அவர் காரில் கிளம்பி, ராயப்பேட்டையிலுள்ள அதிமுக தலைமை அலுவலகம் வந்தார்.
எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய சசிகலா பின்னர் ஜெயலலிதா புகைப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். பிறகு, அதிமுக பொதுச்செயலாளருக்கான இருக்கையில் அமர்ந்து தனது பொறுப்பை ஏற்றுக்கொண்டார்.

அதிமுக பொதுச்செயலாளராக சசிகலாவை நியமித்து கடந்த வியாழக்கிழமை அதிமுக பொதுக்குழு தீர்மானம் நிறைவேற்றிய நிலையில் அதை ஏற்றுக்கொண்டு சசிகலா இப்பதவிக்கு வந்துள்ளார்.
இதன்பிறகு கட்சி நிர்வாகிகள் மத்தியில் சசிகலா உரையாற்றினார். அது, டிவி சேனல்களில் நேரலையாக ஒளிபரப்பு செய்யப்பட்டது. இதுதான் அவர் முதலாவது பொது இடத்து பேச்சு ஆகும். அவர் பேசியதாவது:
எனக்கு எல்லாமுமாய் இருந்தவர் ஜெயலலிதா. நம் அனைவருக்கும் எல்லாமுமாய் திகழ்ந்தவர். என்னை பொதுச்செயலராக தேர்வு செய்ததற்கு அனைவருக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.
உங்களின் அன்பு கட்டளையை ஏற்க வேண்டிய கட்டாயம் எனக்கு வந்துள்ளது. நான் கனவிலும் நினைக்காத ஒன்று நடந்துவிட்டது.
கற்பனை செய்து கூட பார்க்காத நிகழ்ந்துவிட்டது. நன்கு உடல்நலம் தேறிவந்த ஜெயலலிதா நம்மை விட்டு பிரிந்துவிட்டார். எதற்காகவும் நம்மை கைவிடாத ஜெயலலிதா, மரணத்தின் மூலம் அனைவரையும் கைவிட்டுவிட்டார்.
நம் அம்மாவுக்கு இயக்கம்தான் வாழ்க்கை, எனக்கோ அம்மாதான் வாழ்க்கை. ஆயிரமாயிரம் கூட்டங்களுக்கு ஜெயலலிதாவுடன் நான் சென்றுள்ளேன். 33 ஆண்டுகாலம் எத்தனையோ கூட்டங்களில் கலந்து கொண்டேன். ஆனால் இப்போது மைக் பிடித்து பேச வேண்டிய நிலை எனக்கு வந்துவிட்டது. எஞ்சிய வாழ்நாளை அதிமுகவுக்காக, தொண்டர்களுக்காக வாழவேண்டிய உறுதி எடுத்துள்ளேன்.
விசுவாசத்தையும் செயல்பாட்டையுமே ஜெயலலிதா நம்மிடம் எதிர்பார்த்தார். துணிச்சலின் பிறப்பிடமாக இருந்தவர் அவர். இந்திரா காந்தியை தவிர வேறு பெண் தலைவர் இல்லாத நிலையில் ஜெயலலிதா அரசியலுக்கு வந்தார். ஜெயலிலதாவின் ஜெ.வின் அரசியல் பிரவேசம் பெண் இனத்துக்கு நம்பிக்கையை தந்தது. அவர் வழியில் நானும் நடப்பேன்.
எம்ஜிஆர் சிறப்பு அஞ்சல் தலை, நாணயமும் வெளியிட மத்திய அரசை வலியுறுத்துவோம். தொண்டர்களை கண் இமையாக காப்போம். அதிமுக அரசை குறைவராமல் பாதுகாப்போம். எம்ஜிஆர் பிறந்த நாள் நூற்றாண்டு விழா ஆண்டு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்படும்
இவ்வாறு சசிகலா பேசினார். பேசும் போது அவ்வப்போது, சசிகலா கண்ணீர்விட்டு அழுதார்.












Click it and Unblock the Notifications