சசிகலா தலைமையில் அதிமுக எம்.எல்.ஏ.,எம்.பி.க்கள் கூட்டம்.. விவாதித்தது என்ன?
அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா அக்கட்சி எம்.எல்.ஏக்களுடன் இன்று ஆலோசனை நடத்தினார்.
சென்னை: அதிமுக எம்.எல்.ஏக்கள், எம்.பிக்களுடன் கட்சி பொதுச்செயலாளர் சசிகலா சென்னையில் நேற்று மாலை ஆலோசனை நடத்தினார்.
அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா தலைமையில் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நேற்று மாலை நடைபெற்றது. கட்சி தலைமை அலுவலகத்தில் சுமார் 40 நிமிடங்கள் நடைபெற்ற கூட்டத்தில் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்பட 135 சட்டமன்ற உறுப்பினர்களும் பங்கேற்றனர்.
மேலும், இந்தக் கூட்டத்தில் கட்சியின் மூத்த உறுப்பினர்களும் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது. கூட்டத்தில் சட்டமன்றத்தில் அதிமுக அரசின் நிலைப்பாடு மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் அவையில் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்து விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. எதிர்கட்சியினரின் குற்றச்சாட்டை எதிர்கொள்வது குறித்தும் விவாதிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த கூட்டம் முடிந்ததும் போயஸ்கார்டனில் அ.தி.மு.க. எம்.பி.க்கள் கூட்டம் நடைபெற்றது. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்க உள்ளதால் அதில் அ.தி.மு.க. எம்.பி.க்கள் எவ்வாறு செயல்பட வேண்டும் என்று சசிகலா ஆலோசனை வழங்கினார்.
விரைவிலேயே முதல்வராக சசிகலா பொறுப்பேற்க விருப்பம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில், எம்.எல்.ஏக்கள், எம்.பி.க்களுடன் சசிகலா நேற்று திடீர் ஆலோசனை நடத்தியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.