ஒண்ணு விடாம அம்மா ஸ்டிக்கரை ஒட்றோம்.... இது ஓ.பி.எஸ் மாவட்ட வெள்ள நிவாரணம்
தேனி: வெள்ள நிவாரணப் பொருட்களின் மீது ஜெயலலிதாவின் ஸ்டிக்கரை ஒட்டுவதை வைத்து கடும் விமர்சனங்கள் எழுந்தாலும், அதிமுகவினர் அம்மா ஸ்டிக்கர் ஒட்டுவதை மட்டும் விடுவதே இல்லை. அதற்காகவே ஸ்டாம்ப் சைஸ் முதல் ஏ4 சைஸ் வரை ஸ்டிக்கர்களை தயாரித்து வைத்துள்ள அதிமுகவினர். வெள்ள நிவாரணப் பொருட்கள் மீது மட்டுமல்ல... நிவாரண பொருட்களை கொண்டு செல்லும் லாரிகள், ஏன் சுமை தூக்கும் ஆட்கள் மீது கூட விடாமல் தொங்க விட்டுள்ளனர். அமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்தின் மாவட்டத்தில்தான் இந்த கூத்து அரங்கேறியுள்ளது.
வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு சென்னை, திருவள்ளூர், கடலூர் மாவட்ட மக்கள் தவித்து வரும் நிலையில் நாடுமுழுவதும், ஏன் வெளிநாடுகளில் இருந்தும் கூட வெள்ள நிவாரண பொருட்களும், பணமும் குவிந்து வருகின்றன. தேனி மாவட்ட அ.தி.மு.க சார்பாக வெள்ள நிவாரணப் பொருட்களை அனுப்பும் முன்பாக முதல்வர் ஜெயலலிதா ஸ்டிக்கர் ஒட்டவே சில நாட்களை எடுத்துக்கொண்டனர். பி.சி.பட்டியிலுள்ள சந்திர பாண்டியன் கல்யாண மண்டபத்தில் வைக்கப்பட்டிருந்த நிவாரணப் பொருட்களை அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் ஆய்வு செய்தார். ஒரு பொருள் விட்டுப்போகக் கூடாது ஆமா எல்லாத்திலையும் ஸ்டிக்கர் ஒட்டியாச்சுல்ல... என்று கேட்டு தெளிவுபடுத்திய பின்னர்தான் அவற்றை லாரிகளில் ஏற்றவே அனுமதித்தனர் அதிமுகவினர்.

மொத்தம் 13 லாரிகள்
தமிழகத்தின் வட மாவட்டங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்காக தேனி மாவட்டம் அதிமுக சார்பாக 13 லாரிகளில் வெள்ள நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டன. சில்வர்குடம், 10 கிலோ அரிசி, பிளாஸ்டிக் வாளி, பிளாஸ்டிக் மக், பருப்பு வகைகள் வேட்டி, சேலை, துண்டு, தேங்காய், தண்ணீர் கேன், எண்ணெய், குளியல் சோப், துவைக்கும் சோப், சீப்பு மற்றும் சிறுவர் ஆடை ஆகியவை ஒவ்வொன்றும் பத்தாயிரம் எண்ணிக்கையிலான மொத்தம் 1.15 கோடி ரூபாய் மதிப்பில் உள்ள பொருட்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.

முதல்வர் தொகுதி முக்கியம்
இந்த பொருட்கள் முதல்வரின் தொகுதியான ஆர்.கே நகர் மற்றும் திருவள்ளூர், கடலூர் ஆகிய பகுதிகளுக்கு அனுப்பப்பட்டன. செவ்வாய்கிழமையன்று காலையில் அமைச்சர் பன்னீர் செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் குமார் கொடியசைத்து லாரிகளை அனுப்பி வைத்தார்.

லாரியில் கொடி கட்டியாச்சா?
ஒரு பொருள் பாக்கி விடாமல் ஸ்டிக்கர் ஒட்டிய அதிமுகவினர் கட்சிக்கொடிகள், ஜெயலலிதா புகைப்படங்களைக் கொண்டு லாரிகளை அலங்கரித்தனர். அதன் பின்னரே ஒருவழியாக திருப்தியடைந்த பின்னரே கொடியை அசைத்து நிவாரண பொருட்களை அனுப்பி வைத்தனர்.

வெள்ளத்திலும் புகழ்பாடுவோம்
வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணத்தை உடனடியாக வழங்கவேண்டும் இதற்காகவே பல பகுதிகளில் இருந்தும் பணிகளை விட்டு விட்டு வந்து தன்னார்வலர்கள் பணியாற்றி வருகின்றனர். ஆனால் அரசியல் கட்சியனர் வழங்கும் நிவாரணப் பொருட்களிலும் அரசியல் செய்கின்றனரே என்று ஆதங்கப்படுகின்றனர் பாதிக்கப்பட்டவர்கள்.












Click it and Unblock the Notifications