எடப்பாடி அணியோடு எப்போது பேசலாம்... ஓபிஎஸ் அவசர ஆலோசனை
சென்னை: அதிமுக இணைப்புக் குறித்து முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் சென்னை கிரீன் வேஸ் சாலையில் உள்ள இல்லத்தில் ஆலோசனை நடத்தினார்.
அதிமுக அணிகள் இணைப்புக் குறித்த பேச்சுவார்த்தையை முதல்வர் எடப்பாடி அணியுடன் எப்போது தொடங்கலாம் என்று முடிவு செய்வது தொடர்பாக ஓபிஎஸ் அணியினர் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள ஓபிஎஸ் இல்லத்தில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில், முன்னாள் அமைச்சர்கள் நத்தம் விசுவநாதன்,கே.பி.முனுசாமி,பாண்டியராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அதிமுக அணிகள் இணைப்புக்கு ஓபிஎஸ் அணியினர் முட்டுக்கட்டை போடுவதாக நேற்று முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் புகார் தெரிவித்திருந்தார். இதனால் நேற்றே அதிமுக தலைமைக் கழக அலுவலகத்தில் நடக்கவிருந்த பேச்சுவார்த்தை தள்ளிப்போனது என்றும் அவர் கூறியிருந்தார்.
ஓபிஎஸ் அணியினர் மாறிமாறி பேசுகிறார்கள்.நாங்கள் அப்படி இல்லை என்றும் ஒன்றுபட்டு செயல்பட தயார் என்றும் அவர் கூறியிருந்தார்.
ஆனால் எங்கள் தர்ம யுத்தத்தில் வைக்கப்பட்ட,ஜெயலலிதாவின் மர்ம மரணம் குறித்த விசாரணையை சி.பி.ஐ. விசாரிக்கவேண்டும்; சசிகலா மற்றும் அவரின் குடும்பத்தினர் அதிமுகவை விட்டு வெளியேற்றப்பட வேண்டும் ஆகிய நிபந்தனைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று ஓபிஎஸ் அணி நெருக்கடி கொடுத்துள்ளது.
இதன் எதிரொலியாக இன்று அதிமுக தலைமைக் கழக அலுவலகத்தில்,மாவட்ட செயலாளர்கள் கூடும் ஆலோசனை கூட்டத்திற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் கிரீன்வேஸ் சாலையில் உள்ள ஓபிஎஸ் இல்லத்தில் அவசர ஆலோசனைக் கூட்டம் நடப்பது குறிப்பிடத்தக்கது.