ஜெயலலிதா நலம் பெற வேண்டி மேலும் ஒரு அதிமுக தொண்டர் தீக்குளிப்பு
கும்பகோணம்: முதல்வர் ஜெயலலிதா உடல் நலம் பெற வேண்டி கும்பகோணத்தில் அதிமுக பிரமுகர் மோகன்குமார் என்பவர் தீக்குளித்தார். ஆபத்தான நிலையில் அவர் கும்பகோணம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
முதல்வர் ஜெயலலிதா உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு கடந்த 23 நாட்களாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். விரைவில் உடல் நலம் பெற்று வீடு திரும்ப வேண்டும் என அதிமுக அமைச்சர்கள், பிரமுகர்கள், தொண்டர்கள் பல்வேறு பிரார்த்தனைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
தினம்தோறும் அப்பல்லோவுக்கு படையெடுக்கும் அதிமுகவினர் சிறப்பு பூஜைகள் நடத்தி வருகின்றனர்.
முதல்வர் குறித்து தேவையற்ற வதந்திகள் வெளியாவதால் கட்சியினர் அதிர்ச்சியும் வேதனையும் அடைகின்றனர். இதுபோல வேதனையடைந்த அதிமுக தொண்டர் சற்குணம் என்பவர் நேற்று தாம்பரம் மெப்ஸ் சிக்னல் அருகே தீக்குளித்தார். கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதேபோல் மதுரை மாவட்டம் பேரையூர் தாலுகா எழுமலை அருகே உள்ள உத்தப்புரம் தெற்கு தெருவை சேர்ந்த அதிமுக தொண்டர் சுந்தரமூர்த்தி என்பவர் கடந்த 4ம் தேதி திடீரென தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ராஜவேல் நேற்று இரவு உயிரிழந்தார்.
இந்நிலையில் முதல்வர் ஜெயலலிதா நலம் பெற வேண்டி கும்பகோணத்தில் அதிமுக பிரமுகர் மோகன்குமார் என்பவர் தீக்குளித்தார். ஆபத்தான நிலையில் அவர் கும்பகோணம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தீக்காயம் அடைந்த மோகன்குமாருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.