ஆசை காட்டிய தினகரன்.. அசராமல் ஓ.பன்னீர்செல்வம் பின்னால் அணிவகுத்த அதிமுக 'ஸ்டார்கள்'
தினகரனின் ஆசை வார்த்தைகளுக்கு மயங்காமல், நடிகர், நடிகையர் இன்று உண்ணாவிரதப் போராட்டத்தில் பங்கேற்றுள்ளதாக அதிமுக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
சென்னை: ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக, நீதி விசாரணை கேட்டு, தமிழகம் முழுவதும், 32 இடங்களில், முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் அணியினர், இன்று உண்ணாவிரதம் இருந்து வருகிறார்கள்.
சென்னை, எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகில் நடக்கும் போராட்டத்தில், பன்னீர்செல்வம் பங்கேற்றுள்ளார். நட்சத்திர பேச்சாளர்களான நடிகர் மனோபாலா, லியாகத் அலிகான், ஸ்டன்ட் மாஸ்டர் கனல் கண்ணன் ஆகியோர் பேசுகின்றனர்.
திருவண்ணாமலையில் நடிகர் ஜெயகோவிந்தன், விழுப்புரத்தில் ராமராஜன், கோவையில் ஆர்.சுந்தர்ராஜன், திரைப்பட இயக்குனர் பவித்ரன் பங்கேற்றுள்ளனர்.
நாகப்பட்டினத்தில், நடிகை ரஜினி, தேனியில், நடிகை பாத்திமா பாபு, திண்டுக்கலில், நடிகர் தியாகு ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.

நட்சத்திரங்கள்
இந்த நட்சத்திர பேச்சாளர்கள் அதிமுக தலைமை தடுத்தும் அவர்களின் பேரத்திற்கு படியாமல் ஓ.பன்னீர்செல்வம் அணியில் நீடிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினகரன் திடீர் ஆலோசனை
நேற்று முன்தினம், அதிமுக தலைமை அலுவலகத்தில், நடிகர் செந்தில், குண்டு கல்யாணம், சிங்கமுத்து உள்ளிட்ட நடிகர்களை அழைத்து, அக்கட்சி துணை தலைவர் தினகரன் ஆலோசனை நடத்தியுள்ளார். அப்போது, அவர்களிடம், பன்னீர்செல்வம் அணியில் உள்ள நட்சத்திர பேச்சாளர்களை, உண்ணாவிரதத்தில் பங்கேற்க விடாமல் தடுக்க வேண்டும் என கூறியதாக தெரிகிறது.

மயங்காத ஸ்டார்கள்
ஆனாலும், ஆசை வார்த்தைகளுக்கு மயங்காமல், ஏழு நடிகர், நடிகையரும், இன்று உண்ணாவிரதப் போராட்டத்தில் பங்கேற்றுள்ளதாக அதிமுக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் தினகரன் தரப்புக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

சசிகலா கோபம்
சிறையிலுள்ள சசிகலாவிடம் இதை எப்படி எடுத்துச் சொல்வது, சொன்னாலும், இதைக்கூட சாதிக்க முடியவில்லையா என அவர் கேட்டால் என்ன செய்வது என்ற தயக்கத்தில் உள்ளார் தினகரன் என்று அதிமுக வட்டாரங்கள் கூறுகின்றன.












Click it and Unblock the Notifications