ஆர்.கே.நகரில் ஒரு சிக்கல்.. திமுகவிடமிருந்து அதிமுகவுக்குத் தாவத் தயாராகும் ஜாதி வாக்குகள்!
ஆர்.கே. நகரில் திமுகவுக்கு ஆதரவான ஜாதி வாக்குகளை இழுப்பதில் ஆளும் அதிமுக தீவிரமாக இருக்கிறதாம்.
Recommended Video

சென்னை: ஆர்.கே.நகர் தொகுதி இடைத் தேர்தலில் திமுக ஆதரவு ஜாதி வாக்குகளை தங்கள் பக்கம் வளைத்துப் போடுவதில் அதிமுக தீவிரமாக செயல்பட்டு வருகிறது.
ஆர்.கே.நகர் தொகுதி தேர்தல் களம் நாளுக்குநாள் அதிர வைத்துக் கொண்டிருக்கிறது. தி.மு.கவுக்கான வாக்குகளைப் பிரிப்பதில் ஆர்வம் செலுத்தி வருகிறது ஆளும் அதிமுக.
இரட்டை இலை சின்னம் கைக்கு வந்த பிறகு, தமது தலைமைக்கு கிடைத்த சவாலாக ஆர்.கே.நகர் தேர்தலைக் கருதுகிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. அதற்கேற்ப, தொகுதி நிலவர அறிக்கையை நாள்தோறும் உளவுத்துறை அதிகாரிகளிடம் இருந்து கேட்டு அறிகிறார்.

ஜாதி வாக்குகளுக்கு குறி
இன்னும் ஒருசில நாட்களில் தீவிர பிரசாரத்தில் இறங்க உள்ளனர் ஆளும்கட்சி நிர்வாகிகள். இந்நிலையில், தி.மு.கவுக்கு ஆதரவாக, எதிராக இருக்கும் ஜாதி அமைப்புகளிடம் தீவிர ஆலோசனை நடத்தி வருகிறது அதிமுக டீம்.

சசிகலா கோஷ்டி மீது கோபம்
அந்த டீமிடம் பேசிய சமுதாய தலைவர்கள் சிலர், தி.மு.கவில் துணைப் பொதுச் செயலாளர் என்ற உயர்ந்த பொறுப்பில் இருந்தார் சற்குண பாண்டியன். அவர் இறந்தபிறகு, எங்கள் சமுதாயத்தைச் சேர்ந்த யாருக்கும் அந்தப் பதவியைக் கொடுக்கவில்லை. இருப்பினும் தென் மாவட்டங்களில் ஜாதி கலவரத்தைத் தூண்டிவிட்டதில் முக்கிய பங்கு வகித்த சசிகலா கோஷ்டி மீதுள்ள கோபத்தால் தி.மு.கவுக்கு ஓட்டு போட்டு வந்தோம்.

இனி அதிமுகவுக்கே ஓட்டு
2011-ம் ஆண்டு சசிகலா குடும்பத்துக்கு எதிராக ஜெயலலிதா எடுத்த நடவடிக்கையைப் போலவே, கடந்த சில மாதங்களாக சசிகலா குடும்பத்துக்கு எதிராக தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இது நீங்கள் ஆட்சியில் இருப்பதால்தான் நடக்கிறது. இனி எங்களுடைய வாக்குகளை தி.மு.கவுக்குக் கொடுக்க நாங்கள் விரும்பவில்லை. உங்கள் தலைமையிலான அ.தி.மு.கவுக்கே நாங்கள் வாக்களிப்போம்' என உறுதிபடக் கூறியுள்ளனராம்.

ஜாதி தலைவர்களுடன் பேச்சு
இதேபோல், தொகுதிக்குள் உள்ள மாற்று சமுதாய மக்களின் தலைவர்களை சந்தித்துப் பேசி வருகிறது அதிமுக டீம். அப்போலோ மருத்துவமனையில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டிருந்தபோது நடந்த அரவக்குறிச்சி இடைத்தேர்தலில் 53 சதவீதமும் திருப்பரங்குன்றத்தில் 55 சதவீதமும் தஞ்சையில் 54 சதவீத ஓட்டுக்களையும் அ.தி.மு.க பெற்றது. இந்த சதவீதத்தையும்விடவும் அதிக வாக்குகளை ஆர்.கே.நகரில் பெறத் திட்டமிட்டுள்ளனர் அமைச்சர்கள். இரட்டை இலை கைக்கு வந்த பிறகும் வெற்றி கிடைக்கவில்லையென்றால், தினகரன் எதிர் பிரசாரம் செய்வதற்கு வசதியாகப் போய்விடும்' எனவும் அமைச்சர்கள் கருதுகின்றனர். எனவே, மதுசூதனனை வெற்றி பெற வைக்க வேண்டிய கட்டாயத்துக்கு அமைச்சர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications